கைக்கொடுக்காம வந்துட்டியே மா.. லோக்சபாவில் தமிழச்சியை கலாய்த்த திமுக எம்பிக்கள்.. ஒரே சிரிப்பலை
டெல்லி: தென்சென்னை லோக்சபா எம்பியாக தமிழச்சி தங்கபாண்டியன் இன்று பதவியேற்றார். இந்த வேளையில், ‛‛கைக்கொடுக்காம வந்துட்டியே மா'' என அவரை திமுக எம்பிக்கள் கலாய்த்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று எம்பிக்கள் பதவியேற்றனர். அதன்பிறகு இன்று 2வது நாளாக எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர். மதியம் 2 மணிக்கு தமிழக எம்பிக்கள் ஒவ்வொருவராக பதவியேற்றனர்.

முதலில் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் பதவியேற்றார். அதன்பிறகு தமிழகத்தில் 3வது நபராக தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பதவியேற்றார். கையில் அரசியலமைப்பு புத்தகத்தை வைத்தபடி அவர் பதவியேற்று கொண்டார். இந்த வேளையில் ‛‛ மக்களவையின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் எனும் நான் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும், பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்'' என்றார்.
மேலும் ‛‛வாழ்க தமிழ், வளர்க முத்தமிழ் அறிஞரின் புகழ், வாழ்க தலைவர் தளபதி, வாழ்க தமிழ் திருநாடு'' என்று பதவியேற்பின் முடிவில் கூறினார். அதன்பிறகு அவர் மேடையில் இருந்து அப்படியே கீழே இறங்கி சென்றார். பொதுவாக எம்பியாக பதவிறே்றவர்கள் சபாநாயகர் இருக்கையில் இருப்பவரிடம் கைக்குலுக்கி வணக்கம் தெரிவித்து சென்றனர். ஆனால் தமிழச்சி தங்கபாண்டியன் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த ராதா மோகன் சிங்கிடம் கைக்குலுக்கவில்லை.
இதனை கவனித்த திமுக எம்பிக்கள், ‛‛கைக்கொடுங்க.. கைக்கெடுங்க'' என அவரிடம் தெரிவித்தனர். அப்போது ஒருவர், ‛‛கைக்கொடுக்காம வந்திட்டியே மா'' என கூறினார். இதையடுத்து சுதாரித்த தமிழச்சி தங்கபாண்டியன் திரும்ப சபாநாயகர் இருக்கையை நோக்கி நடந்து சென்று ராதா மோகன் சிங்கிற்கு வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு அவரும் வணக்கம் தெரிவித்தார். அதன்பிறகு தமிழச்சி தங்கபாண்டியன் கைக்குலுக்கி, ஒரு விநாடி யோசித்தபடி ராதா மோகன் சிங்கும் கைக்கொடுத்தார். இது திமுக எம்பிக்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அதேபோல் ஆரணி எம்பி தரணி வேந்தனும் சபாநாயகர் இருக்கையில் இருந்த ராதா மோகன் சிங்கிற்கு கைக்கொடுக்காமல் வந்தார், பின்னர் எம்பிக்கள் நினைவூட்டியதும் திரும்ப போய் கை கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications