டெல்லி சேவைகள் மசோதா! மாநிலங்களவையில் பாஜக பக்கம் சாய்ந்த மூன்று கட்சிகள்.. ஆம் ஆத்மி அதிர்ச்சி
டெல்லி: டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பு மத்திய அரசினுடையது என்பதை உறுதி செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் டெல்லி சேவைகள் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மசோதாவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்த மசோதா விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தேசிய தலைநகர் டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்தது வந்தது. இந்நிலையில், இனி டெல்லி அரசுதான் இந்த அதிகாரிகளை நியமிக்கும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்த நிலையில், பாஜக இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படியாக மோதல் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில் விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது.

விசாரணையின் முடிவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குதான் அதிகாரிகளை நியமிக்கும் பவர் இருக்கிறது என்று தீர்ப்பளித்தது. இதனை மத்திய அரசு ரசிக்கவில்லை. எனவே மேல் முறையீட்டிற்கு சென்றிருக்கிறது. அதேபோல இந்த உத்தரவை நீர்த்து போக செய்ய, அவசர சட்டத்தையும் இயற்றியது. இதன்படி டெல்லியின் அதிகாரிகளை மத்திய அரசுதான் நியமனம் செய்ய முடியும். இந்த அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவரும் அனுமதி அளித்திருந்தார்.
பொதுவாக அவசர சட்டம் இயற்றப்பட்டால் அதை ஒரு மசோதாவாக மாற்றி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டும். மக்களவையில் பாஜகவுக்கு பலம் இருப்பதால் சட்டம் அங்கு ஈஸியாக நிறைவேறிவிடும். இதே மாநிலங்களவையில் போதுமான பலம் கிடையாது. மொத்தமுள்ள 245 எம்பிக்களில் 111 பேர்தான் மோடி அரசை ஆதரிப்பவர்கள். அதேபோல 99 பேர் 'இந்தியா' கூட்டணியை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள். இரண்டு பக்கமும் இல்லாமல் 28 எம்பிக்கள் இருக்கிறார். தற்போது இங்கு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனில் மோடி அரசுக்கு 123 எம்பிக்களின் ஆதரவு அவசியம்.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்த மசோதா விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவளிக்க இருப்பதாக கூறியுள்ளன. அதாவது ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் எம்பிக்கள் 9 பேர்+தெலுங்கு தேசம் எம்பி 1+பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்பி 9 பேர் பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள். ஏற்கெனவே இருக்கும் எம்பிக்களின் எண்ணிக்கை 111 அத்துடன் 19 எம்பிக்கள் சேர்ந்தார் 130 எம்பிக்களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைக்கும். இதன் மூலம் மாநிலங்களவையிலும் டெல்லி சேவைகள் மசோதா எளிதாக நிறைவேறிவிடும்.
முன்னதாக இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications