டெல்லி அதிகார மோதல் தொடர்பான மசோதா- ராஜ்யசபாவில் பாஜகவுக்கு அக்னி பரீட்சை! எந்த கட்சி ஆதரவுகள் தேவை?
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத்தை பறிக்கும் மத்திய அரசின் அவசர சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் பாஜக மும்முரமாக உள்ளது. ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து ராஜ்யசபாவில் இம்மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு என்பதில் டெல்லி யூனியன் பிரதேசம், மத்திய அரசு இடையே மோதல் இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமானது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது என அதிரடி தீர்ப்பு வழங்கியது. இது மத்திய பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

உடனடியாக, உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை செயலற்றதாக்கும் வகையில் மத்திய பாஜக அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த அவசர சட்டமானது, டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் அதிகாரிகள் நியமனம், மாறுதல் பரிந்துரைகளை செய்வதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது. இந்த அவசர சட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்தார். இதற்காக தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டம் -1991-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளதால் இதனை சட்டமாக நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இது தொடர்பான மசோதாவையும் கொண்டுவர வேண்டும். பாஜகவைப் பொறுத்தவரையில் லோக்சபா, ராஜ்யசபாவில் எப்படியும் இந்த மசோதா நிறைவேறிவிடும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது. ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான நடவடிக்கை என்பதால் இந்த மசோதாவை ராஜ்யசபாவில் காங்கிரஸ் ஆதரிக்கலாம் என நம்புகிறது பாஜக
ஒருவேளை ராஜ்யசபாவில் காங்கிரஸ் ஆதரிக்காவிட்டாலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் கட்சிகளின் எம்பிக்கள் ஆதரவுடன் இம்மசோதாவை நிறைவேற்றலாம் என கணக்குப் போடுகிறது பாஜக. ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்க இன்னும் 8 எம்.பி.க்கள்தான் தேவை. ஆகையால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உதவியுடன் எளிதாக மசோதாவை நிறைவேற்றிவிடலாம் என நினைக்கிறது பாஜக.

அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மத்திய அரசின் இம்மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என அழைப்பு விடுத்து வருகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். பிஜூ ஜனதா தளத்தைப் பொறுத்தவரையில் ஒடிஷாவில் அக்கட்சிக்கான பிரதான எதிரியே பாஜகதான். ஆகையால் பாஜக அரசின் இம்மசோதாவை அக்கட்சி ஆதரிக்கக் கூடாது என்கின்றன எதிர்க்கட்சிகள். அண்மையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிஷா முதல்வரும் பிஜூ ஜனதா தளத்தின் தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்தித்தார். இதன்பின்னர் டெல்லி சென்ன்ற நவீன் பட்நாயக், பிரதமர் மோடியையும் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு முயற்சிக்கு எதிரான கருத்துகளை நவீன் பட்நாயக் கூறியிருந்தார். மேலும் ஆந்திராவிலும் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்னதான் பாஜகவை எதிர்த்தாலும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏராளமான வழக்குகளை சரமாரியாக மத்திய பாஜக அரசு தொடர்ந்துள்ளது. இவற்றை முன்வைத்து ஜெகன் மோகன் ரெட்டியை பாஜக பக்கம் சாயவிடாமல் தடுக்கவும் எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. ஆனாலும் எப்படியும் மசோதாவை நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்கிறது பாஜக.












Click it and Unblock the Notifications