நடுரோட்டில் உட்கார்ந்த 90ஸ் கிட்ஸ்.. அவர் அடம் பிடித்த விஷயத்தை கேட்டு மிரண்ட தர்மபுரி போலீஸ்
தருமபுரி: 90ஸ் கிட்ஸ்கள் பலர் திருமணம் ஆகாமல் தவிக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம், திருமண வயது உடைய பெண்கள் குறிப்பிட்ட சமூகங்களில் அதிகம் இல்லாததுதான் காரணம். இந்நிலையில் தருமபுரியில் திருமணம் ஆகாத விரக்தில் இளைஞர் செய்த காரியம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Recommended Video
பாட்சா படத்தில் ரஜினி பாட்டு ஒன்று வரும் . அதில் எட்டு எட்டா மனித வாழ்வை பிரச்சுக்கோ எந்த எட்டில் இப்ப இருக்க நினைச்சுக்கோ என்று கூறி விவரிப்பார்.
இரண்டாம் எட்டில் கல்வியும், 3ம் எட்டில் திருமணமும், நான்காவது எட்டில் குழந்தையும், ஐந்தாம் எட்டில் செல்வமும் சேர்க்க சொல்லியிருப்பார்,. அதாவது ஒவ்வொரு 8 வருடத்திற்கு ஒருமுறை என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருப்பார்.

திருமணம் 2வது முடிவு
ஆனால் நிலைமை அப்படி அல்ல. 3ம் எட்டுவரைக்குமே கல்வியும், 4வது எட்டுவரை செல்வமும் சேர்த்தால் திருமணத்தை பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியும் என்ற நிலையில் பலர் இருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பே 50 ஆயிரம் சம்பளம், சொந்த வீடு, கார் என செட்டில் ஆனவரை மாப்பிள்ளையாக தேடும் காலம் இப்போது உள்ளது. இதனால் தான் பல இளைஞர்கள் சம்பாதித்து செட்டில் ஆகிவிட்டு திருமணம் செய்ய முனைகிறார்கள்.

காத்திருப்பு காலம்
30ஐ தாண்டிவிட்டால் உண்மையிலேயே ஓரு ஆண் முன் கேட்கப்படும் முதல் கேள்வி இன்னமும் திருமணம் ஆகவில்லையா என்பதுதான். செட்டில் ஆகிவிட்டு பெண் கேட்டால், வயது அதிகம் என்று தட்டிக்கழிப்புகளை அதிகம் பார்க்கிறார்கள். இன்னொரு புறம் , திருமண வயதில் பெண் பிள்ளைகளே நிறைய சமுதாயத்தில் இல்லை. இதன் விளைவாக காத்திருப்பு காலம் அதிகமாக இருக்கிறது. வயது வித்தியாசமும் அதிகமாக உள்ளது. ஏனெனில் பலர் இப்போது இரண்டு அல்லது ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்வதால் பாலின விகிதத்தில் சமநிலை இருப்பது இல்லை.

தர்ணா போராட்டம்
இந்நிலையில் திருமணம் ஆகாத விரக்தில் இருந்த 90ஸ் கிட்ஸ் ஒருவர் குடிபோதையில் தருமபுரி நகரின் முக்கிய பகுதியாக திகழ்வது நான்கு ரோடு சந்திப்பு சாலையில் தர்ணா போராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பிற்பகலில் சுமார் 33 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் திடீரென போக்குவரத்து மிகுந்த நான்கு ரோடு சாலையின் நடுவே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார், அதனை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த எல்லப்பன் என்பது தெரியவந்தது.

கோரிக்கை
அப்போது காவல் துறையினரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அல்லது எனக்கு அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் இல்லையேல் இங்கிருந்து வரமாட்டேன் என அடம் பிடித்தார். அதன்பின்னர் அந்த நபரை பொதுமக்கள உதவியுடன் அந்த இடத்தில் இருந்து போலீசார் அப்புறபடுத்திய பின்னரே போக்குவரத்து சீரடைந்தது. பின்னர் போதையில் இருந்த வாலிபரை காவல்துறையினர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications