யானையின் நெற்றியை உரசி சென்ற கம்பிகள்.. அவ்வளவுதான்.. அதிர்ந்து போன தர்மபுரி.. பதற செய்யும் வீடியோ
தருமபுரியில் மின்கம்பி உரசியதில் காட்டு யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை விரட்டப்பட்டபோது அந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட மரண்டஹல்லி காப்புக்காட்டிலிருந்து இரண்டு பெண் யானைகள் மற்றும் இரண்டு குட்டிகளுடன் ஒரு மக்னா யானை வெளியேறியது. இந்த யானைகள் உணவு தேடி ஆத்துக்கொட்டாய், நல்லூர் மற்றும் சென்னப்பன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தன. அங்கிருந்த பயிறுகளை சாப்பிட்டவாறு மேலும் உணவு தேடி அலைந்துகொண்டிருந்தன.
இதனையடுத்து ஊர் மக்கள் வனத்துறையினருக்கு புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வனத்துறையினர் உடனடியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஊர் மக்களே யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் வந்து யானைகளை விரட்ட முயன்றனர். யானைகளும் அங்கிருந்து மெல்ல நகர்ந்தது. ஆனால் சிறிது தூரத்தில் சென்ற உடன் மூன்று யானைகளும் சட்டென சரிந்துவிழுந்தன.

3 யானைகள்
இதனை அறியாத இரண்டு குட்டி யானைகளும் அங்கிருந்து வேக வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. பின்னர் திரும்பி பார்க்கையில் தங்களது பெற்றோரை காணவில்லையென திரும்பி வந்துள்ளன. இதற்குள் சம்பவம் அறிந்த மின்சார வாரியத்தினர் அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். முன்னர் சரிந்து விழுந்த மூன்று யானைகளும் விவசாய தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலையில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன. அதன்பின்னர் தனது பெற்றோர்களை விட்டு பிரிய மனம் வராத இரண்டு குட்டி யானைகளும் அதே பகுதியில் நீண்ட நேரம் காத்திருந்தன. இதனையடுத்து அக்குட்டிகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.

ஆண் யானை
இந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது இதே தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பாப்பாரப்பட்டி பகுதியில் மக்னா யானை ஒன்றும் ஆண் யானை ஒன்றும் சுற்றித் திரிந்துள்ளது. இதில் மக்னா யானையை வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் முதுமலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆண் யானை பிடிக்க முடியவில்லை. இது மட்டும் தனியாக பாப்பாரப்பட்டி காப்புக்காட்டு பகுதியில் சுற்றி வந்துகொண்டிருந்தது.

மின்சாரம்
இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை இந்த யானையானது கெலவள்ளி கிராமத்தில் உள்ள பயிர்களை நாசம் செய்துள்ளது. எனவே வனத்துறையினர் யானை விரட்டியுள்ளனர். இதில் யானை கிராமத்தின் தென்னந்தோப்பு வழியாக சென்றிருக்கிறது. இப்படி போகும் வழியில் குறுக்கே இருந்த ஏரிக்கரையை கடக்க அதன் மீது யானை ஏறியிருக்கிறது. இந்த கரையில் இருந்த மின் கம்பத்தில் மின் கம்பிகள் தாழ்வானதாக இருந்திருக்கின்றன. இது யானையின் நெற்றியில் உரசியுள்ளது. இதனையடுத்து யானை சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்திருக்கிறது.

உயிரிழப்பு
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் உடனடியாக யானை அருகே சென்று பார்த்திருக்கின்றனர். ஆனால் யானை மின்சாரம் தாக்கிய நொடியிலேயே உயிரிழந்துவிட்டது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய வனத்துறையினர் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அதேபோல சம்பவம் குறித்தும் விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications