தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் ஊர் ஊராக சுற்றுப்பயணம் செல்லும் அன்புமணி! கட்சியினருடன் சந்திப்பு
தர்மபுரி: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியை வரும் தேர்தலில் கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ள அன்புமணி ராமதாஸ் ஊர் ஊராக சுற்றுப்பயணம் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் இன்று தர்மபுரி பெண்ணாகரம் சென்ற அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தின் கீழ் உள்ள பாசன திட்டங்களை தமிழக அரசு தாமதப்படுத்தக் கூடாது என்று கோரிய அன்புமணி ராமதாஸ் தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் உயர் சிகிச்சைக்காக பெங்களூரருக்கோ அல்லது சேலத்திற்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்தார்.
வளர்ச்சி என்ற பெயரில் விவசாய விளை நிலங்களை அழித்து தான் தொழிற்சாலைகள் கொண்டு வர வேண்டும் என்றால் அப்படி ஒரு நிலை தேவையில்லை என்று கூறிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் உள்ள தரிசு நிலங்களில் தொழிற்சாலைகளை அமைக்கலாமே என யோசனை கொடுத்துள்ளார். மேலும், மதுவை பாக்கெட்களில் விற்பனை செய்யும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மதுவை பாக்கெட்களில் விற்பனை செய்தால் இளைஞர்களும், மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது என்றவர் மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்றார். கஞ்சா விற்பனை தமிழகத்தில் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த அன்புமணி ராமதாஸ், கஞ்சா புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். காவல்துறையில் உள்ள மது ஒழிப்பு பிரிவிற்கு கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரினார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 5 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளதாகவும் இவற்றை உடனடியாக நிரப்ப அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இதற்கு உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications