தர்மபுரி: ஜல்லிக்கட்டை பார்க்க ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பெங்களூர் தொழில் அதிபர்.. அசந்துபோன மக்கள்!
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக பெங்களூரில் வசிக்கும் தொழில் அதிபர் ஒருவர் குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் வந்திறங்கியது அங்கு இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 3 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குக்கிராமத்தில் நமது கலாசார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் என களைகட்டும்.

ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டு
மேலும், பொங்கல் பண்டிகை என்றவுடன் சட்டென நினைவுக்கு வருவது நமது வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள்தான். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவினியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடத்தபடும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்புபெற்றவை. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோது அதனை எதிர்த்து தமிழகமே திரண்ட வரலாறு உண்டு.

தர்மபுரியில் நடந்த ஜல்லிக்கட்டு
நமது உணர்வோடு கலந்து விட்ட ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டும் மதுரை உள்ளிட்ட பல இடங்களில் சிறப்பாக நடந்தது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் தடங்கம் என்ற கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கட்டுக்கடங்காமல் சீறிப்பாய்ந்த காளைகளை, கலைஞர்கள் தீரத்துடன் அடக்கினார்கள். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து கொண்டிருந்தனர்.

ஹெலிகாப்டரில் வந்த தொழில் அதிபர்
முன்னதாக ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிக்கும் தொழில் அதிபர் பாபு என்பவர் குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் ஜல்லிக்கட்டு நடந்த இடத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் வந்திறங்கினார். அவரை ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் வரவேற்றனர். அங்கு கூடி இருந்தவர்கள் இதனை பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர்.

இதுதான் தமிழனின் அடையாளம்
சிலர் ஹெலிகாப்டர் முன்பு நின்று மகிழ்ச்சியுடன் போட்டோ எடுத்துக் கொண்டு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். தொழில் அதிபர் பாபுவின் சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பொம்ம அள்ளி கிராமம் ஆகும். பெரிய பிஸ்னஸ்மேனாக உருவாகிய போதிலும் அவர் நமது பாரம்பரிய விளையாட்டை விட்டு கொடுக்கவில்லை. இதுதான் ஜல்லிக்கட்டில் அடையாளம் என்று அங்கு இருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications