'ஷீல்ட் பாதுகாப்பு'.. சுற்றி சுற்றி கொரோனா.. தப்பித்த தர்மபுரி.. ஒருவர் கூட பாதிக்காதது எப்படி?
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா காரணமாக ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா காரணமாக ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. மிக சரியான திட்டமிடல் மூலம் தர்மபுரி மாவட்டம் இந்த சாதனையை செய்து இருக்கிறது.
Recommended Video
தமிழகத்தில் நேற்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் கொரோனாவில் இருந்து 118 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா இல்லை.
4 மாவட்டங்களில் இல்லை
தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் மட்டும்தான் கொரோனா வைரஸ் இல்லை. இதில் தர்மபுரி மாவட்டம் கொஞ்சம் வித்தியாசமானது. தர்மபுரி கொரோனாவிற்கு எதிராக மிக சரியான திட்டமிடுதலை செய்து கொரோனாவை தடுத்து இருக்கிறது. தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது. ஆம், தர்மபுரி கொஞ்சம் தவறி இருந்தாலும் அங்கு பலருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கும்.
எல்லா மாவட்டங்களும் பாதிப்பு
ஏனென்றால் தர்மபுரியை சுற்றி இருக்கும் முக்கியமான மாவட்டங்கள் அனைத்திலும் கொரோனா தாக்கியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திற்கு அருகே இருக்கும் சேலம், ஈரோடு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய எல்லா மாவட்டங்களும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் 70 பேருக்கும், விழுப்புரத்தில் 27 பேருக்கும், சேலத்தில் 22 பேருக்கும், வேலூரில் 17 பேருக்கும், திருவண்ணாமலையில் 8 பேருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
கேள்வி?
இப்படி தர்மபுரியை சுற்றி இருக்கும் எல்லா மாவட்டங்களும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. தர்மபுரிக்கு மேலே இருக்கும் கிருஷ்ணகிரி மட்டும்தான் கொரோனா காரணமாக பாதிக்கப்படவில்லை. இந்த நிலையில் தர்மபுரி எப்படி கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்தது, எப்படி ஒருவர் கூட அங்கு கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடை கண்டிப்பாக ஆச்சர்யம் அளிக்க கூடிய ஒன்றாக உள்ளது.
மிக சரியான திட்டமிடல்
தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான திட்டமிடலை தர்மபுரி மிக சரியாக செய்து இருக்கிறது. முக்கியமாக அம்மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி மற்றும் மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் ஆகியோர் மிக சிறப்பாக இணைந்து திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கே.பி.அன்பழகன் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ ஆவார். இதனால் தர்மபுரியில் கொரோனா தடுப்பு பணிகளை அவர் முன்னின்று செய்து வருகிறார்.
மொத்தமாக எல்லைகளை மூடியது
முதலில் கொரோனாவிற்கு எதிராக தர்மபுரி மொத்தமாக தங்கள் எல்லைகளை மூடி உள்ளது. அவசியம் இன்றி மாவட்டத்திற்குள் ஒருவரை கூட விடவில்லை. 24 மணி நேரமும் அனைத்து எல்லையிலும் போலீசார் நிற்க வைக்கப்பட்டு நள்ளிரவில் கூட முழுமையாக சோதனைகளை செய்து இருக்கிறார்கள். அதேபோல் வெளியூரில் இருந்து ஏற்கனவே ஊருக்குள் வந்தவர்களை தினமும் வீட்டிற்கே சென்று கண்காணித்து இருக்கிறார்கள்.
தனி தனியாக சோதனை
வெளியூரில் இருந்து தர்மபுரி வந்தவர்களை தினமும் அம்மாட்ட ஆட்சியர் போன் செய்து தனி தனியாக உடல்நிலை குறித்து விசாரித்து இருக்கிறார். போனை எடுக்காதவர்களை நேரில் சென்று ஆட்களை அனுப்பி சோதனை செய்து இருக்கிறார்கள். முக்கியமாக மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பென்னாகரம், பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், நல்லம்பள்ளி ஆகிய பகுதிகளில் மக்களை வெளியே வர அனுமதிக்கவில்லை.
பொருட்கள் கிடைத்தது
மக்களை வெளியே விடவில்லை என்றாலும் கூட அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ஆட்சியா் சு.மலா்விழி மற்றும் அமைச்சா் கே.பி.அன்பழகன் டீம் ஏற்பாடு செய்து வழங்கி உள்ளது. 33 வார்டுகளிலும் நடமாடும் வாகனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே டோர் டெலிவரி செய்துள்ளனர். இதனால் மக்கள் யாரும் வெளியே வரவில்லை. தமிழகத்தில் இதன் மூலம் தர்மபுரி முன்மாதிரி மாநிலமாக மாறியுள்ளது .
ஒரு இடம் விடாமல் கிருமி நாசினி
அதிலும் கூட தெரு தெருவாக ஒரு இடம் விடாமல் எல்லா இடங்களில் அம்மாவட்ட நிர்வாகம் கிருமிநாசினிகளை தெளித்து இருக்கிறது. ஒரு இடம் விடாமல் கிருமிநாசினிகளை தெளித்து உள்ளனர். இதற்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் வாலண்டியர்களாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். தர்மபுரி மட்டும் கொஞ்சம் தவறி இருந்தால் மாவட்டத்தில் கொரோனா புகுந்து இருக்கும். ஆனால் அதை தடுக்கும் வகையில் மாவட்டத்தை சுற்றி ஷீல்ட் போல அரண் அமைத்து சோதனைகளை செய்துள்ளனர்.
டெல்லியின் திட்டம்
டெல்லியில் அனைத்து மாவட்டங்களையும் மூடி கொரோனாவை எதிர்கொண்டு உள்ளனர். அங்கு இதற்கு ஆபரேஷன் ஷீல்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடி, மொத்தமாக கொரோனா பரவலை தடுப்பது. டெல்லி இந்த வாரம் அறிவித்த இந்த திட்டத்தை, இரண்டு வாரங்களுக்கு முன்பே தர்மபுரி செயல்படுத்தி அதில் வெற்றியும் பெற்று இருக்கிறது.
கூட்டு முயற்சி
எம்எல்ஏக்கள், அமைச்சகர்கள், அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள், இளைஞர்கள் என்று எல்லோரும் சேர்ந்து ஒன்றாக குழுவாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இதுவரை தர்மபுரி அதில் வெற்றிபெற்றுள்ளது . இதுதான் அங்கு கொரோனா ஒருவருக்கு கூட ஏற்படாமல் இருக்க காரணம் என்கிறார்கள். மிக கடுமையான கட்டுப்பாடு, மக்களுக்கு சரியான நேரத்தில் உதவி, தனி மனித இடைவெளி மூலம் தர்மபுரி இந்த சாதனையை செய்து உள்ளது.