ஓட்டு முக்கியம் பிகிலு! பயணிகளிடம் 10 நிமிடம் பெர்மிஷன் கேட்டு.. ஓடிச் சென்று ஓட்டுப்போட்ட டிரைவர்
தர்மபுரி: தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் பேருந்தை இயக்கிய ஓட்டுநர், ஓடிச் சென்று வாக்கைப் பதிவு செய்துவிட்டு வந்து மீண்டும் பேருந்தை சேலத்திற்கு இயக்கியுள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு இன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
இன்று பதிவாகும் வாக்குகள் வரும் பிப். 22ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

வாக்குப்பதிவு
இன்று காலை 7 மணிக்கு மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மட்டுமே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், மாநிலத்தில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் உள்ள இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், அங்கு மட்டும் வாக்குப்பதிவு சற்று தாமதமாக தொடங்கியது.

மந்தம்
இன்று காலை முதலே சில இடங்களில் மந்தமாகவே வாக்குப்பதிவு நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. மதியம் 1 மணி நிலவரப்படி 35.34% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. குறிப்பாக பகல் 1 மணி நிலவரப்படி சென்னையில் 23.42% மட்டுமே வாக்குப் பதிவு நடந்துள்ளது. வாக்குப்பதிவு சில பகுதிகளில் மந்தமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்
இந்தச் சூழலில் தர்மபுரி மாவட்டத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு பஸ் ஓட்டுநர் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ள சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது இன்று காலை தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சேலம் செல்லும் பேருந்தை ஸ்ரீதர் என்ற ஓட்டுநர் இயக்கியுள்ளார். அவருக்கு பொம்மிடி அரசுப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்கு இருந்துள்ளது. இதனிடையே பேருந்து பொம்மிடி வந்த போது பொம்மிடி அரசுப்பள்ளி வாக்குச்சாவடி அருகே ஸ்ரீதர் பேருந்தை நிறுத்தினார்.

ஜனநாயக கடமை ஆற்றினார்
பேருந்தில் இருந்த பயணிகளிடம் சொல்லி அனுமதி வாங்கிவிட்டு, வாக்குச்சாவடி மையத்திற்கு ஓடி சென்ற ஸ்ரீதர், தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குச்சாவடி மையத்தில் அப்போது கூட்டம் இல்லாததால் சீக்கிரமாக அவர் வாக்களித்துவிட்டு திரும்பினார். வாக்களித்த பின்னர் அவசர அவசரமாக ஓடி வந்த ஸ்ரீதர், மீண்டும் சேலத்திற்கு பேருந்தை இயக்கினார். நகர்ப்புறங்களில் சிலர் வாக்களிக்கத் தயங்கும் நிலையில், பேருந்தை நிறுத்திவிட்டு, தனது ஜனநாயக கடமையை ஆற்றிய பஸ் ஓட்டுநரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications