அன்புமணியை மணமுடிக்கும் முன்பே பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்.. யார் இந்த சவுமியா?
சென்னை: பாமக தலைவர் அன்புமணியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் சவுமியா . தருமபுரியில் தற்போது களமிறங்கியுள்ள சவுமியா பிறந்த குடும்ப பின்னணி இப்போதைய தலைமுறையினர் பலரும் அறியாதது.
தருமபுரி லோக்சபா தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடுகிறார் சவுமியா அன்புமணி. இவர் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். தருமபுரியில் அன்புமணி களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து சவுமியா அன்புமணி தருமபுரி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டார். இவர் தனது வேட்புமனுவில் தனது பெயரில் ரூ 48 கோடியில் அசையா சொத்துக்களும் தனது கணவர் அன்புமணி பெயரில் 6.85 லட்சம் ரூபாயில் அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சவுமியா அன்புமணி தனது பெயரில் 12 கோடியே 5 லட்சம் ரூபாயில் அசையும் சொத்துக்களும் தனது கணவர் அன்புமணி பெயரில் 67 லட்ச ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சவுமியா தனக்கு வங்கியில் 9 கோடி ரூபாய்க்கு கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் பதிவு செய்திருக்கிறார்.
சவுமியா அன்புமணி வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் பாமக, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தருமபுரி தொகுதியில் வெற்றியை பெற்று டாக்டர் ராமதாஸுக்கு அந்த வெற்றியை காணிக்கையாக்குவேன் என்றார். மேலும் தேர்தல் என்பது தனக்கு புதிதல்ல, தைரியமாக எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சவுமியாவின் மாமனார் பாமக நிறுவனர், கணவர் அன்புமணி ராமதாஸ் முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் லோக்சபா எம்பி, மாநிலங்களவை எம்பி, பாமக தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் வகித்து வருகிறார். ஆனால் அன்புமணியை சவுமியா திருமணம் செய்வதற்கு முன்பே அவர் பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது தெரியுமா.
சவுமியாவின் தந்தை கிருஷ்ணசாமி, ஆரணி லோக்சபா தொகுதியின் எம்பியாக இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் மூத்த நிர்வாகி. இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக 2006 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை பதவி வகித்திருந்தார். அது போல் இவருடைய சகோதரர் விஷ்ணுபிரசாத். இவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர்களில் ஒருவர். இவரும் தற்போது ஆரணி தொகுதியின் சிட்டிங் எம்பியாக இருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஷ்ணுபிரசாத்திற்கு கடலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications