எதிரெதிர் துருவங்கள் மோதல்.. அரவை ஆலையால் அடித்துக்கொண்ட அதிமுக, திமுகவினர்.. ஒரே பரபரப்பு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கரும்பு அரவையை முதலில் யார் துவக்கி வைப்பது தொடர்பாக திமுகவினர், அதிமுகவினர் இடையே மோதல் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கூட்டுறவு சரக்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் இலக்கு வைத்து கரும்பு அரவை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரரை ஆலையில் 2 லட்சம் டன் கரும்புகளை அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
‛‛பொதுக்குழு’’.. திமுகவை பார்த்து கத்துக்கோங்க.. அதிமுகவை சீண்டிய தர்மபுரி எம்பி செந்தில் குமார்!
வராத வேளாண் அமைச்சர்
இதற்கான துவக்க பணி இன்று துவங்கியது. முன்னதாக கரும்பு அரவையை இன்று வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைப்பதாக இருந்தது. இதற்காக அழைப்பிதழ்கள் அடிக்கப்பட்டு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. இதேபோல் தர்மபுரி கலெக்டர் சாந்தியும் அதில் பங்கேற்கவில்லை.
துவங்கிய களேபரம்
மாறாக கரும்பு ஆலையில் அரவை பணியை துவக்கி வைக்கும் விழாவுக்காக திமுக, அதிமுகவினர் ஏராளமானவர்கள் திரண்டு வந்திருந்தனர். இந்நிலையில் தான் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், கலெக்டர் ஆகியோர் பங்கேற்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து தான் அங்கு களேபரம் துவங்கியது.
திமுக, அதிமுகவினர் மோதல்
அதாவது கரும்பு ஆலையில் அரவையை யார் தொடங்கி வைப்பது என்பது தொடர்பாக அதிமுக, திமுகவினர் இடையே மோதல் துவங்கியது. அதாவது அதிமுக முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு எம்எல்ஏவுமான கேபி அன்பழகன் அவரது ஆதரவாளர்களும், முன்னாள் அமைச்சரும் திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் ஒன்றுபோல் கரும்பு அரவையை துவக்கி வைக்க முயன்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இறுதியில் சமாதானம்
அதன்பிறகு சமாதானமடைந்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சரான பழனியப்பன், பென்னாகரம் பாமக எம்எல்ஏ ஜிகே மணி ஆகியோர் ஒரு புறமும், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜ், பாலகோடு எம்எல்ஏ கேபி அன்பழகன், பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி ஆகியோர் இன்னொரு புறம் நின்று கரும்பு அரவை பணிகளை துவக்கி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.