‛மாட்டுக்கறி தானே’.. தர்மபுரி அரசு பஸ்சில் இறக்கப்பட்ட பட்டியலின பெண்! கண்டக்டர் அராஜகம் - சஸ்பெண்ட்
தர்மபுரி: தர்மபுரியில் மாட்டுக்கறி எடுத்து செல்ல அனுமதியில்லை எனக்கூறி பட்டியலின பெண்ணை அரசு பஸ்சில் இருந்து பாதி வழியில் இறக்கிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வரும் சூழலில் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் நவலை கிராமத்தை சேர்ந்த பாஞ்சாலை. பட்டியலினத்தை சேர்ந்தவர். இவருக்கு வயது 59. இவர் நவலை பஸ் நிலையம் அருகே காலையில் காய்கறி வியாபாரம் செய்வார். மாலையில் மாட்டிறைச்சி விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் நேற்று மாட்டிறைச்சி வாங்க பாஞ்சாலை அரூருக்கு சென்றார். அதன்பிறகு அங்கிருந்து அவர் அரசு பஸ்சில் நவலை கிராமத்துக்கு திரும்பி கொண்டிருந்தார். பாஞ்சாலை தனது கையில் சில்வர் தூக்குவாளி ஒன்றை வைத்திருந்தார்.
பஸ்சை டிரைவர் சசிக்குமார் ஓட்டினார். கண்டக்டராக ரகு என்பவர் பணியில் இருந்தார். இந்த அரசு பஸ் நவலை கிராமம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த வேளையில் கண்டக்டர் பாஞ்சாலையை நோக்கி, ‛நீ நவலை கிராமத்தில் மாட்டுக்கறி விற்பனை செய்பவர் தானே. தூக்குவாளியில் மாட்டுக்கறி உள்ளதா? பஸ்சில் மாட்டுக்கறி எடுத்து செல்ல அனுமதியில்லை'' எனக்கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாஞ்சாலை, பஸ்சில் எத்தனை பேர் இருந்தாலும் தன்னை மட்டுமே குறிவைத்து கண்டக்டர் ரகு இப்படி கேள்வி கேட்கிறாரே என்ற அதிர்ச்சியில் உறைந்தார். அவர் பதில் சொல்லாமல் இருந்தார். இதனால் கோபமடைந்த கண்டக்டர் ரகு பஸ்சை நிறுத்தி பாதி வழியில் அவரை இறக்கிவிட்டு சென்றார்.
மோப்பிரிப்பட்டி வனப்பகுதியில் அவர் பஸ்சில் இருந்து இறக்கிவிடப்பட்டார். இதையடுத்து அங்கிருந்து பாஞ்சாலை நடந்து சென்றார். இந்நிலையில் தான் பஸ்சில் நடந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இது சர்ச்சையை கிளப்பியது. மேலும் கண்டக்டர் ரகு தீண்டாமையை கடைப்பிடித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து சம்பவம் குறித்து சேலம் கோட்டத்தின் தர்மபுரி முதன்மை நிலை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினர். அப்போது கண்டக்டர், டிரைவர் மீது தவறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் சசிக்குமார் மற்றும் கண்டக்டர் ரகு ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். தற்போது அவர்கள் 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications