தருமபுரி அருகே விவசாயி மீது துப்பாக்கிச் சூடு... வேட்டைக் கும்பல் அட்டகாசம்
தருமபுரி: தருமபுரி அருகே வேட்டைக் கும்பல் ஒன்று நாட்டுத் துப்பாக்கியால், விவசாயி ஒருவரை சுட்டுவிட்டு தப்பியோடி உள்ளது. அந்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
கடுக்காய் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (32) தன்னுடைய விவசாய நிலத்திற்கு இரவு நேரத்தில் காவலுக்கு செல்வது வழக்கம். நேற்றிரவு தோட்டத்தில் இருந்த போது, அடையாளம் தெரியாத சிலர் டார்ச் லைட் கொண்டு முயல் வேட்டையாட வந்துள்ளனர்.

இதனை கண்ட சேகர், அவர்களை தனது இரு சக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார். முயல் வேட்டைக்கு வந்தவர்களும் அவர்களது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை பின்தொடர்ந்த சேகர் பாப்பாரப்பட்டி மின் வாரியம் அலுவலகம் வரை துரத்திச் சென்று உள்ளார்.
அப்போது, வேட்டைக்கு வந்த மூன்று நபர்களும், சேகரை நோக்கி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் இடுப்புப் பகுதிக்குக் கீழ் பால்ரஸ் குண்டுகள் பாய்ந்தது. இதனை அடுத்து, வேட்டைக்கு வந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
துப்பாக்கி குண்டுகளால் காயம்பட்ட சேகர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் சில தினங்களுக்கு முன்பு, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கொக்கராப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி(38). இவர் 2 நாய்களை வளர்த்து வருகிறார். பக்கத்து வீட்டை சேர்ந்த பெருமாள்(28) என்பவரும் நாயை வளர்த்து வருகிறார்.
இருவர் வளர்க்கும் நாய்களும் சண்டையிட்டுக் கொண்டன. இதை கண்டு ஆத்திரமடைந்த ஆசைத்தம்பி, தன்னிடம் இருந்த ஏர்கன் துப்பாக்கியால், பெருமாள் வளர்த்து வரும் நாயை நோக்கி சுட்டார். இதில் நாய்க்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, நாயை சுட பயன்படுத்திய ஏர்கன் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில், வேட்டையாட வந்த கும்பல், விவசாயியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications