மரண சாலை.. திகில் கிளப்பும் தொப்பூர் கணவாய்.. கடந்த 10 மாதத்தில் 36 பேர் உயிரிழப்பு
தர்மபுரி: தொப்பூர் கணவாய் சாலையை லாரி ஓட்டுனர்கள் மரணசாலை என்றே அழைக்கிறார்கள். இந்த சாலையில் இதுவரை கடந்த 10 மாதத்தில் மட்டும் 36 பேர் பலியாகி உள்ளனர். இந்த சாலை போட்டதில் இருந்து இதுவரை ஏற்பட்ட விபத்துக்களை எண்ணில் அடக்க முடியாது, அந்த அளவிற்கு விபத்துக்கள் நடந்துள்ளது.
பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வரும் போது தர்மபுரியில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் போது வரும் அடர்ந்த மலைப்பகுதி தான் தொப்பூர் கணவாய். சுமார் 3 கி.மீ செல்லும் இந்த அடர்ந்த காடுகள் அடங்கிய வனப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது.
அதிபயங்கர விபத்துக்கள் நடந்து வரும் தொப்பூர் கணவாய் 2007ம் ஆண்டு வரை இருவழிச் சாலையாகவே இருந்து வந்தது. அந்த ஆண்டில் தான் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இருவழிச் சாலையாக இருந்த போது அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்த நிலையில், 4 வழிச்சாலையாக மாற்றப்பட்ட பின்னரும், விபத்துகள் இதுவரை குறையவே இல்லை.

அடிக்கடி விபத்து
சேலத்திலிருந்து தர்மபுரி செல்லும் சாலை மேடாக இருப்பதால் அந்த சாலையில் எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. அதில் வரும் வாகனங்கள் வழக்கம் போல் சென்று வருகின்றன . ஆனால் தர்மபுரியிலிருந்து சேலம் செல்லும் வாகனங்கள் தான் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றன. இதனால் ஏராளமான உயிரிழப்புகள், வாகனங்கள் சேதம், படுகாயம் என மரணசாலையாக காணப்படுகிறது.

2 வது கியரில் செல்ல வேண்டும்
தர்மபுரியில் இருந்து 24வது கிலோமீட்டரில் குறிஞ்சி நகர் சுங்கச்சாவடி உள்ளது. இங்கிருந்து பூரிக்கல் ஜங்சன், ஆஞ்சநேயர் கோயில், வனத்துறை பூங்கா, தடுப்பணை பகுதியை தாண்டி தொப்பூர் வழியாக அனைத்து வாகனங்களும் சேலம் செல்லும். இந்த பகுதி 3 கிலோமீட்டர் தூரம் உள்ளது. அடுத்தடுத்து 3 அபாயகரமான வளைவுகள் பள்ளமாக இருக்கும். கனரக வாகனங்கள் இந்த சாலையில் செல்வது மிக சிரமமான காரியம் ஆகும். இந்த 3 கிலோமீட்டர் தூரத்திற்கு குறைவான வேகத்தில் தான் வாகனங்கள் செல்ல வேண்டும். அதை தாண்டி வேகமாக சென்றால், அதாவது இரண்டாவது கியரிலேயே செல்ல வேண்டும். அதை மீறி வேகமாக சென்றால் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன.

விபத்துக்கு காரணம்
வாகன ஓட்டிகள் கவனக்குறைவாக வந்து கட்டுப்பாட்டை இழக்கும் சம்பவங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இன்னொரு காரணம் ரோடு வளைவில் எதிர் திசை சரிவாய் உள்ளது அதுவும் வாகன ஒட்டிகள் கட்டுப்பாடு இழக்க காரணம். ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தால், அந்த வாகனத்தை அப்புறப்படுத்துவதற்குள் பின்னால் வரும் வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

4 பேர் பலியாக காரணம்
அப்படித்தான் நேற்றும் லேசான விபத்து நடந்தது. அதை கவனிக்காமல் அதிகவேகத்தல் சிமெண்ட் லாரி வந்ததால் பயங்கர விபத்து ஏற்பட்டு 12 கார்கள், மினி லாரி என 15 வாகனங்கள் விபத்தில் சிக்கின. 4 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது.

டீசலை மிச்சம்
தொப்பூர் கணவாய் எஸ் வளைவு சாலையில் கனரக வாகனங்கள் வரும் போது திடீரென விபத்தில் சிக்க முக்கியமான காரணங்கள், கனரக வாகன டிரைவர்கள் டீசலை மிச்சப்படுத்துவதற்காக நியூட்ரலில் வாகனத்தை இயக்குவதால் முன்னால் செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாவதை தவிர்க்க முடியவில்லை என்று கார் ஓட்டுனர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். கடந்த 10 மாதத்தில் மட்டும் இங்கு விபத்தில் 36 பேர் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications