திமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...? மு.க.ஸ்டாலின் ஆதங்கம்
தருமபுரி: தமிழகத்தில் ஆயிரம் மக்கள் பிரச்சனைகள் உள்ள நிலையில் அதைப்பற்றியெல்லாம் விவாதிக்காமல் திமுகவை பற்றியும், தன்னை பற்றியும் மட்டுமே ஊடகங்கள் விமர்சிப்பதாக மு.க.ஸ்டாலின் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் நடைபெற்ற திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இந்தக் கருத்தைக் கூறினார்.
மேலும், தமிழகத்தில் இருக்கக் கூடிய அரசு எதற்குமே உதவாத அரசு எனவும் ஸ்டாலின் சாடினார்.
தீர்மான விளக்கம்
தமிழகம் முழுவதும் திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். வழக்கத்திற்கு மாறாக கூலிங் கிளாஸ் கண்ணாடி அணிந்தபடி இந்தக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
ஆவேசக் கேள்விகள்
மு.க.ஸ்டாலின் பேசத்தொடங்கியதுமே நேரடியாக ஊடகங்களுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். நீட் பிரச்சனை, ரயில்வேயில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிப்பு, அரசுத்துறைகளில் ஊழல், என விவாதிக்க ஆயிரம் பிரச்சனைகள் உள்ள நிலையில், தன்னை பற்றியும், திமுகவை பற்றியும் மட்டுமே அண்மைக்காலமாக ஊடகங்கள் விமர்சிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
அப்பாவி
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியால் தமிழகம் இன்று கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், முதலமைச்சர் அப்பாவியை போல் நடிப்பதாகவும் ஸ்டாலின் சாடினார். மேலும், தமிழக அரசு யாருக்கும் உதவாத அரசு என்றும் அவர் விமர்சித்தார்.
கொச்சைப்படுத்தி
மிசா கைதியாக சிறையில் அனுபவித்த கொடுமையைக் காட்டிலும், இப்போது அதைக் கொச்சைப்படுத்தி சிலர் விமர்சிப்பதை தான் மிகப்பெரிய கொடுமையாக கருதுவதாக தெரிவித்தார். மேலும், சிறை, போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு தன்னை நோக்கி கேள்வி கேட்க எந்த அருகைதையும் இல்லை என ஆவேசமாக பேசினார். இதேபோல் முரசொலி நிலத்தை மையமாக வைத்து சிலர் புலம்புவதாக விமர்சித்தார்.
நிர்வாகம் மோசம்
ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்களை பற்றி தாம் எடுத்துக்கூறினால் முதலமைச்சருக்கு கோபம் வருவதாகவும், டெங்கு காய்ச்சலை கூட கட்டுப்படுத்த முடியாத வகையில் மோசமான நிர்வாகம் உள்ளதாக விமர்சித்தார். மேலும், அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
நாடு முழுவதும்
திமுக எம்.பிக்கள் தமிழக பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாமல் இந்திய அளவிலான பிரச்சனைகளுக்கும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருவதாக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். மேலும், தருமம் வெல்லும் என்பதை உணர்த்தத் தான் தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் தான் பங்கேற்றதாக விளக்கம் அளித்தார்.