டெல்லி அடங்கும் வரை அடிக்க வேண்டும்! அடிக்கும் அடியில் பாஜக அடங்கியாக வேண்டும்! முக ஸ்டாலின் அட்டாக்
தருமபுரி: தொகுதி மறுசீரமைப்பால், சொந்த நாட்டுக்குள்ளேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்படும் ஒரு கொடுமையை அனுமதிக்கலாமா? எனவும், டெல்லி அடங்கும்வரை நாம் அடிக்க வேண்டும்! நாம் அடிக்கும் அடியில் திமிரெடுத்த பா.ஜ.க. அடங்கியே ஆக வேண்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
தருமபுரியில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்," நம்முடைய திராவிட மாடலில், இந்தியாவுக்கே வழிகாட்டும் ரோட்டை நாம் போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தப் பாதையில், முன்னோக்கிப் போகலாம் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் அழைக்கிறோம். இது, பாஜகவுக்குப் பிடிக்கவில்லை!
ஏனென்றால், இந்தியா வளர்ந்துவிட்டால், ஆர்.எஸ்.எஸ். உருவாக்க நினைக்கும் 200 ஆண்டுகாலப் பிற்போக்குச் சமூகத்தை உருவாக்க முடியாது! அந்தச் சமுதாயம் வந்தால்தான், மக்களை மயக்கி, உழைப்பைச் சுரண்டி ஒரு சிலர் மட்டும் வளமாக வாழலாம்.

முக ஸ்டாலின்
ஆனால், நம்முடைய திராவிட மாடலில் வளர்ச்சி என்பது, எல்லோருக்குமானது! யாரோ ஒரு சிலர் மட்டும் வளர்ந்தால், அது பிசினஸ்! எல்லோரும் வளர வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று உழைப்பதுதான், திராவிட மாடலின் சக்சஸ்! அதனால்தான், தமிழ்நாடு முழுவதும் பரவலான வளர்ச்சியைக் கொண்டு போகிறோம். தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கிறது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்பு! அதாவது, இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த நாட்டில் பசியும் - வறுமையும் அதிகமாக இருக்கிறது. இதைச் சரி செய்ய வேண்டும் என்றால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, நம்முடைய தமிழ்நாட்டிலும் - இன்னும் பல மாநிலங்களிலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாகச் செயல்படுத்தினோம். இப்போது என்னவென்றால், உங்கள் மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ற மாதிரி, தொகுதி மறுசீரமைப்புச் செய்யப் போகிறோம், உங்களுக்குக் கூடுதலாக எம்.பி. சீட் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
தமிழ்நாடு அரசியல்
உண்மை என்னவென்றால், இதே காலகட்டத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் சில மாநிலங்களுக்குத்தான், விகிதாச்சாரப்படி அதிக இடம் கிடைக்கப் போகிறது! இதனால், நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல் வலுவிழந்து போய்விடும். நம்முடைய எம்.பி.க்களுக்குப் பவர் இல்லை என்றால், டெல்லி அதிகார வர்க்கம் தமிழ்நாட்டைப் பற்றிச் சிந்திக்குமா? நமக்கு எந்தத் திட்டமாவது கிடைக்குமா? தென்னிந்தியாவிலிருந்து பிரதமர் உருவாக வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவே முடியாது. சொந்த நாட்டுக்குள்ளேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்படும் ஒரு கொடுமையை அனுமதிக்கலாமா?
திமுக கருப்புக்கொடி போராட்டம்
இந்த ஆபத்துதான், தொகுதி மறுசீரமைப்பு! இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றுதான் நாளைக்குத் தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப் போகிறோம். எல்லோரும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, டெல்லியின் ஆணவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தயாராகிவிட்டீர்களா? உங்கள் வீட்டு வாசலில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முழக்கமிடத் தயாரா? தமிழ்நாட்டில் நாம் இந்தப் போராட்டத்தை நாளை நடத்தும்போது டெல்லியில் நம்முடைய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டிருப்பார்கள்!
உரிமைக்குரல்
தேர்தல் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து எம்.பி.க்களும் தொகுதியில் ஆங்காங்கே இருந்தார்கள். அனைவரும் சென்றுவிட்டார்கள். மணி மட்டும்தான் இருக்கிறார். அவரும் நாளை காலை சென்றுவிடுவார். ஒருவர்கூட இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டேன். தேர்தல் எல்லாம் அதற்குப்பிறகுதான், இதுதான் நமக்கு முக்கியம். இதுதான் நமக்கு சுயமரியாதை. நாளைக்கு நாம் குரல் எழுப்பத் தவறிவிட்டால், நம்முடைய குரலுக்கு எப்பொழுதுமே மதிப்பு இருக்காது! இந்தப் போராட்டத்தில் வெல்லும் வரை நம்முடைய உரிமைக்குரல் அடங்கக் கூடாது!
திமிரெடுத்த பா.ஜ.க
டெல்லி அடங்கும்வரை நாம் அடிக்க வேண்டும்! நாம் அடிக்கும் அடியில் திமிரெடுத்த பா.ஜ.க. அடங்கியே ஆக வேண்டும்! பழனிசாமி அவர்களே... இது தமிழ்நாட்டுக்கான போர்! இதிலாவது கொஞ்சம் சுயமரியாதையோடு நடந்து கொள்ளுங்கள்!அடிமையாகவும், துரோகியாகவும் இருப்பது பழனிசாமிக்கு மட்டும் பழக்கமில்லை; அவரோடு வருகிறவர்களின் இலட்சணத்தையும் பாருங்கள்... துரோகிகளின் மொத்தக் கூடாரமாக உருவாகியிருப்பது N.D.A." என்றார்.














Click it and Unblock the Notifications