மனதில் இடம்பிடித்த மாஜி.. காத்திருக்கும் ‘பெரிய’ பதவி? - பட்டமளிப்பு விழாவில் புள்ளி வைத்த ஸ்டாலின்!
தருமபுரி : அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பழனியப்பன் கடந்த ஆண்டு திமுகவில் இணைந்த நிலையில், விரைவில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அ.ம.மு.கவில் இருந்து திமுகவுக்கு வந்த மற்ற முக்கிய புள்ளிகளுக்கு உடனடியாக பெரிய பொறுப்புகளை கொடுத்து அழகுபார்த்த ஸ்டாலின், பழனியப்பனை கவனிக்கவில்லை என அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தி நிலவியது.
அண்மையில், முதல்வர் ஸ்டாலின் இருந்த மேடையில் முனைவர் பட்டம் பெற்ற பழனியப்பனை வியந்து பாராட்டிய ஸ்டாலின், அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க ஆலோசித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

பட்டம் பெற்ற பழனியப்பன்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா கடந்த மே 16ஆம் தேதி நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இந்த விழாவில் 731 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். இதில் கடந்த 2011 முதல் 2016 வரை நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த பழனியப்பன், தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

அதிமுகவில் அமைச்சராக
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள மோளையனூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன், அதிமுகவில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்து அமைச்சர் பதவி வரை உயர்ந்தவர். 2001ல் எம்.எல்.ஏ ஆன இவர், 2011ல் மீண்டும் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற நிலையில் ஜெயலலிதாவால் அமைச்சராக்கப் பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் ஓரங்கப்பட்டார். பின்னர், தினகரன் ஆதரவாளராகச் செயல்பட்டு எம்.எல்.ஏ பதவியையும் இழந்தார்.

அமமுகவில் முக்கிய பதவி
அமமுகவில் பழனியப்பன் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும் ஆக்கப்பட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியில் தோல்வியைத் தழுவினார். இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் தி.மு.கவில் இணைந்தார் பழனியப்பன்.

முன்பே வந்திருந்தால்
பழனியப்பன், திமுகவில் இணையும் விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். பழனியப்பன் சறிது காலம் முன்பே இணைந்திருந்தால் தருமபுரியும் நமதாக இருந்திருக்கும் என்றார். அந்த அளவுக்கு தருமபுரியில் செல்வாக்கு மிகுந்த நபர் என்பதை ஸ்டாலினும் அடையாளம் கண்டிருந்தார்.

அமமுகவின் முக்கிய புள்ளிகள்
தினகரனின் அமமுகவில் முக்கிய புள்ளிகளாக இருந்த செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன் ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டன. செந்தில் பாலாஜியை பெரிதும் நம்பி அவருக்கு முக்கியமான பொறுப்புகளை அளித்து வருகிறார் ஸ்டாலின். ஆனால், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் சேர்ந்து கிட்டத்தட்ட 1 ஆண்டு நிறைவடைய இருக்கும் நிலையில், இதுவரை முக்கிய பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் கட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பட்டமளிப்பு விழா
இந்நிலையில்தான், கடந்த மே 16-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுரிடம் இருந்து முனைவர் பட்டம் பெற்ற பழனியப்பனை மேடையில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். அரசியலில் பணியாற்றிக் கொண்டே ஆராய்ச்சிப் பட்டம் பெற்றுள்ள பழனியப்பனை வியந்து பாராட்டிய ஸ்டாலின், அன்றே அவருக்கு பொறுப்பு வழங்குவது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

தருமபுரி திமுக
தருமபுரி திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மீதும் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் ஒன்றில் கூட வெல்லாததற்கு தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பி.என்.பி.இன்பசேகரன் ஆகியோர் சுணக்கமாகச் செயல்பட்டதே காரணம் என தலைமைக்கும் புகார்கள் சென்றுள்ளன. இதையடுத்தே, அங்கு கடலூரைச் சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை பொறுப்பாளராக நியமித்தார் ஸ்டாலின்.

அதிரடி மாற்றம்
திமுகவில் நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் மறுசீரமைக்கப்படும் என்றும், தற்போது உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் பலரின் பதவி பறிக்கப்படக் கூடும் என்றும் பேச்சு நிலவி வருகிறது. அண்மையில் நடந்த மா.செக்கள் கூட்டத்திலும் ஸ்டாலின் நிர்வாகிகளை எச்சரித்துள்ளார். இதன் மூலம் அவர் சிலர் மீது அதிருப்தியில் இருப்பதும், விரைவில் மாற்றம் இருக்கலாம் என்பதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

மாவட்ட பொறுப்பாளர்?
இந்நிலையில்தான், தருமபுரி மாவட்ட பொறுப்பாளர் பதவி பழனியப்பனுக்கு வழங்கப்படும் என தகவல்கள் கசிந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த திமுக ஆட்சியின் ஒராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் சிறப்பாகப் பேசி அசத்தியுள்ளார் பழனியப்பன். இதுவும் தலைமையின் காதுக்குச் சென்றுள்ளது. இதனால், ஓராண்டாக அமைதியாக காத்திருந்த பழனியப்பனுக்கு முக்கிய பொறுப்பை பரிசாக வழங்க ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications