தொப்பூர் கனவாயில் சூப்பர் மாற்றம்.. பெங்களுர், சேலம் மக்களின் கனவு நிறைவேற போகிறது

Subscribe to Oneindia Tamil

சேலம்: பெங்களூரில் இருந்து தர்மபுரிய கடந்து சேலம் செல்லும் ஒவ்வொருவரும் கடக்கும் இடம் என்றால், அது தொப்பூர் கணவாய் தான். கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில் உள்ள பெங்களூரில் இருந்து தொப்பூர் வரும் போது அப்படியே 900 அடிக்கு கீழ் வரும். சேலத்தை நோக்கி வரும்போது, தொப்பூர் கணவாயில் ரோடு திடீரென செங்குத்தாகக் கீழ்நோக்கி இறங்கும். பெங்களூரில் இருந்து பாரம் ஏற்றி வரும் கனரக லாரிகள் இந்த இறக்கத்தில் இறங்கும்போது, புவியீர்ப்பு விசையால தானாகவே வேகம் பல மடங்கு அதிகரிக்கும்.

பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வரும் லாரிகள், அந்தத் தொடர் சரிவிலும் வளைவுகளிலும் வேகத்தைக் கட்டுப்படுத்த ஓட்டுநர்கள் பிரேக்கை அடிக்கடி மிதித்துக்கொண்டே இருப்பார்கள். இதனால் பிரேக் லைனர்கள் சூடாகி திடீரென பிரேக் பிடிக்காமல் போய்விடும். கட்டுப்பாட்டை இழந்த அந்த ராட்சத லாரிகள், முன்னால் மெதுவாகச் செல்லும் கார்கள் மற்றும் பிற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி அப்பளமாக நொறுக்கிவிடும்.

Steep Thoppur descent simplified NHAI s 905-Crore elevated bridge makes driving from Bengaluru easy

இங்கு எப்போதுமே விபத்து ஏற்படும். எனவே இங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. பெங்களூர் டூ சேலம் வர்ற அந்த அபாயகரமான சரிவையும் வளைவுகளையும் நேராக்க, தூண்களை நட்டு உயர்மட்ட மேம்பாலத்தை அமைத்து வருகிறது. இதற்கான பணிகள் 41% நிறைவடைந்துள்ளது. திட்டமிட்டப்படி 2028- ஆம் ஆண்டிற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு ஒரு கிலோ மீட்டர் தூரச் சாலைக்கு (மேம்பாலச்சாலைக்கு) ரூபாய் 137 கோடியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செலவிடுகிறது.

மலைப்பாதை என்று தெரிந்து வாகனம் ஓட்டுவது த்ரில்லிங்கான அனுபவம் . ஆனால், மலைப்பாதையாக இருந்தாலும், மக்களால் இது மலைப்பாதை என்று உணராமல் ஓட்டி சென்று ஏமாறும் இடம் என்றால் சேலம் - தருமபுரி மாவட்ட எல்லையில் இருக்கும் தொப்பூர் கணவாய் தான். பேய் சாலை என்று அழைக்கும் அளவிற்கு அவ்வளவு விபத்துக்கள் நடந்துள்ளன. வளைந்து நெளிந்து செல்லும் அந்த அடர்ந்த காட்டுப் பாதையில், எப்போது எந்த லாரி பிரேக் ஃபெயிலியர் ஆகி பின்னால் வரும் வாகனத்தின் மீது மோதும் என்றே தெரியாது. வாரத்திற்கு ஒரு விபத்து, மாதத்திற்கு ஒரு பெரும் உயிர்ச்சேதம் எனத் தமிழகத்தின் மிக ஆபத்தான சாலையாக தொப்பூர் கணவாய் இருந்து வருகிறது.

ஏனெனில் பெங்களூர் 3,000 அடி உயரத்தில் இருந்து அப்படியே சரிந்து தருமபுரி பீடபூமிக்கு வரும்போது 1,650 அடியாக (500 மீட்டர்) குறையும். அங்கிருந்துதான் அசல் ஆபத்து ஆரம்பிக்கும். இந்தத் தொப்பூர் கணவாயோட வெறும் 5.6 கிலோமீட்டர் தூரத்திற்குள், ரோடு செங்குத்தாக 171 மீட்டர் (சுமார் 560 அடி) கீழ்நோக்கிப் பாளமாக இறங்கும். 1,650 அடி உயரத்தில் இருந்து வெறும் 5 கிலோமீட்டர் தூரத்திற்குள் வண்டிகள் சட்டென 1,100 அடி உயரப் பகுதிக்குக் கீழே குதிக்க வேண்டும். அத்தோடு 4 டிகிரி அளவுக்குக் கடுமையான வளைவுச் சரிவுகளும் (Downward slope) இருப்பதால், லாரிகளால் பிரேக் பிடிக்க முடியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன.

இங்கு பயணிக்கும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள தொப்பூர் மலைப்பாதை உயர்மட்ட மேம்பாலமாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்கள். இதையடுத்து 2023-ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, 2024-ல் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த ₹905 கோடி பிரம்மாண்ட திட்டம், 2025 மார்ச் முதல் களத்தில் வேகம் எடுத்து, தற்போது 2026 ஜூன் மாதத்தில் 41% பணிகளை நிறைவு செய்துள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு ₹137 கோடி செலவிடப்படும் இந்த பிரம்மாண்ட திட்டத்தின் பின்னணியில் உள்ள சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.

மத்திய அரசு ஏன் இந்த மேம்பாலத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறது?

பொதுவாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுவதும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குச் சாலை அமைக்கச் சராசரியாக ₹50 கோடிதான் செலவிடும். ஆனால், இந்த தொப்பூர் திட்டத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு மட்டும் ₹137 கோடி செலவிடப்படுகிறது! மொத்தம் 6.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமையவிருக்கும் இந்த உயர்மட்ட மேம்பால திட்டத்தின் மொத்த மதிப்பு ₹905 கோடி. மத்திய அரசு ஏன் இவ்வளவு பிரம்மாண்ட தொகையைச் சாதாரணமாக ஒரு மலைப்பாதைக்கு ஒதுக்கியது என்ற கேள்வி எழலாம். காரணம்-அங்குள்ள புவியியல் சிக்கல்களும், மக்களின் உயிருக்கு இருக்கும் ஆபத்தும்தான் முக்கியமான காரணம்.

தொப்பூர் கணவாயில் இருக்கும் நிஜமான சிக்கல்கள் என்ன?

தொப்பூர் மலைப்பாதை மிகக் கடுமையான, கட்டுப்படுத்த முடியாத வளைவுகளையும், செங்குத்தான சரிவுகளையும் கொண்டது. பெங்களூரில் இருந்து வரும் கனரக வாகனங்கள், இந்த சரிவில் இறங்கும்போது வேகம் கட்டுக்கடங்காமல் போய் விபத்துக்குள்ளாகின்றன. இது காடுகளின் நடுவே அமைந்திருப்பதால், சாலையை அகலப்படுத்துவது எளிதல்ல. மேலும் வனவிலங்குகளின் நடமாட்டமும் இங்கு அதிகம். ந்தச் சாலையில் விபத்து நடக்காத நாட்களே இல்லை எனும் அளவுக்கு, லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதி அப்பளமாக நொறுங்குவது இங்குத் தொடர்கதையாக இருந்தது.

இந்த வளைவுகளையும் சரிவுகளையும் தரைமட்ட சாலையில் சரி செய்யவே முடியாது என்பதால், தூண்களை எழுப்பி, வளைவுகளே இல்லாத ஒரு நேர்க்கோடான உயர்மட்ட மேம்பாலத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக 8 மீட்டர் முதல் 50 மீட்டர் உயரம் வரை, ராட்சத தூண்கள் 83 இடங்களில் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டு வருகின்றன.

திட்ட இயக்குநர் சீனிவாசுலு என்ன சொல்கிறார்?

நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் சீனிவாசுலு மற்றும் அதிகாரிகள், சமீபத்தில் இந்தப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தொப்பூர் கணவாய் சாலை வழியாகப் பயணிக்கும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் பெரும் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, இந்தச் சாலையை முற்றிலுமாக விரிவாக்கம் செய்து, உயர்மட்ட மேம்பாலம் அமைத்து, இதை ஒரு 'விபத்தில்லாச் சாலையாக' மாற்ற மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பணிகள் மிக வேகமாக, விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மிக விரைவில் இந்தச் சாலை பாதுகாப்பானதாக மாறும். மேலும், இது வனப்பகுதி என்பதால், கட்டுமானப் பணிகளால் அங்குள்ள வனவிலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு, விலங்கினங்களின் பாதுகாப்பிற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன." என்றார்.


மக்களுக்கு "நல்ல விஷயம்" என்ன?

இறுதியாக, இந்தத் திட்டத்தால் தமிழக மக்களுக்கு நிம்மதியான, பாதுகாப்பான பயணம் கிடைக்க போகிறது. தற்போது 41% பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், திட்டமிட்டபடி வருகிற 2028-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த உயர்மட்ட மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மேம்பாலம் திறந்து வைக்கப்பட்ட பின்பு, தொப்பூர் மலைப்பாதையில் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது முற்றிலும் தடுக்கப்படும். அச்சமே இல்லாமல் குடும்பத்தோடு காரில் பயணிக்கலாம். மணி கணக்கில் காத்துக்கிடக்கும் போக்குவரத்து நெரிசலுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும். பல ஆண்டு கால பயத்திற்குப் பிறகு, சேலம் - தருமபுரி மக்களுக்கு மட்டுமல்ல, தென் தமிழகத்தை வட மாநிலங்களுடன் இணைக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் இதுவொரு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+