கொரோனா நோயாளிகளை குதூகலிக்க வைக்கும் திருமூர்த்தி... பாடலால் பறந்துபோன கவலைகள்..!
தருமபுரி: கண்ணாண கண்ணே என்ற பாடல் மூலம் சமூக வலைதளங்கில் வைரலான இளம் பாடகர் திருமூர்த்தி கொரோனா நோயாளிகளை மகிழ்விக்கும் வகையில் பாடல்கள் பாடி அசத்தி வருகிறார்.
கொரோனா தொற்றால் சோகம் சூழ்ந்திருந்த நோயாளிகளுக்கு திருமூர்த்தியின் பாடல்கள் கவலை மறக்கச் செய்யும் மாமருந்தாக அமைந்துள்ளது.
கொரோனாவால் திருமூர்த்தியும் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட அதனை மறந்து தன்னை சுற்றியுள்ளவர்களை மகிழ்வித்து வருகிறார் அவர்.

நொச்சிப்பட்டி கிராமம்
தருமபுரி மாவட்டம் நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. பிறவியேலேயே பார்வை குறைபாடுடன் பிறந்த இவர் இளம் வயது முதலே இசையின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தார். அந்த வகையில் விசுவாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணாண கண்ணே என்ற பாடலை இவர் அச்சுப்பிறழாமல் பாடியது பெங்களூரை சேர்ந்த அருண் குமார் என்பவர் மூலம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவரை நேரில் அழைத்து சந்தித்த இசையமைப்பாளர் இமான் தனது படம் ஒன்றில் பாடுவதற்கான வாய்ப்பை அளித்தார்.

6 மாதம் வீட்டில்
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக தருமபுரி மாவட்டம் நொச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த திருமூர்த்திக்கு எப்படியோ கொரோனா தொற்று வந்துவிட்டது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பர்கூர் அரசு கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை அங்கிருந்த பெரியவர்களுக்கு அடையாளம் தெரியாவிட்டாலும் இளசுகளுக்கு அடையாளம் தெரிந்தது.

குதூகலம்
பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளியான திருமூர்த்தியிடம் பாடல்கள் பாடுமாறு கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள இளைஞர்கள் வலியுறுத்தியதால், தனது சோகத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் தனக்கு விருப்பமான பாடல்களை பாடி அசத்தி வருகிறார். வெற்று தண்ணீர் கேணை தபேலாவாக கொண்டு திருமூர்த்தி பாடும் பாடல்களை கொரோனா சிகிச்சை மையத்தில் இருப்பவர்கள் தங்கள் செல்போன்களில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

மகிழ்ச்சி
திருமூர்த்தி அந்த மையத்திற்கு செல்லும் முன்பு அங்கு காணப்பட்ட ஒரு வித வெறுமை இப்போது இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. மாலை நேரமானால் திருமூர்த்தியின் பாடல் கச்சேரி தூள் கிளப்புகிறது. இவரது பாடலை அங்குள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் கேட்டுவிட்டு பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications