கோவை சித்ரா.. 'கைராசி டாக்டர்'.. எஸ்எஸ்எல்சியே படிக்காதவரிடம் 20 வருடமாக ஏமாந்த திண்டுக்கல்
திண்டுக்கல்: 1991-ல் உயிரிழந்த பிரபல மருத்துவரின் ஹாஸ்பிடலை வாங்கி, "சித்ரா" எனும் தன் பெயரை, இறந்த மருத்துவரின் பெயருக்கு மாற்றி, 20 ஆண்டுகளாக திண்டுக்கல்லில் மருத்துவம் பார்த்து வந்த எஸ்எஸ்எல்சி கூட படிக்காத கோவை பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
10ம் வகுப்பு படித்தவர்கள், 12ம் வகுப்பு படித்தவர்கள், நர்சிங் படித்தவர்கள், டாக்டரிடம் உதவியாளராக வேலை பார்த்தவர்கள், மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்தர்கள் டாக்டர் என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வைத்தியம் பார்க்கிறார்கள். இதுபோன்ற போலி டாக்டர்கள் மீது அடிக்கடி ரெய்டு நடத்தி அதிகாரிகள் அவர்களை கைது செய்கிறார்கள்.

அதேநேரம் போலி டாக்டர்கள் புதிது புதிதாக உருவாகி கொண்டு தான் இருக்கிறார்கள். வீட்டில் போய் வைத்தியம் பார்ப்பது, மெடிக்கல் ஷாப்பில் ஊசி போடுவது, சித்தா டாக்டர், ஆயுர்வேத டாக்டர் என்று பொய் சொல்லி நம்ப வைத்து எம்பிபிஎஸ் படித்தவர்கள் செய்யும் எல்லா வேலையும் செய்வது என்று நிறைய பேர் சுற்றுகிறார்கள்.
திண்டுக்கல்லில் இப்படியுமா 20 வருடத்திற்கு மேலாக ஒரு ஆஸ்பத்திரி இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு சம்பவம் நடந்துள்ளது. வழக்கமாக டாக்டர்கள் தான் போலியாக இருப்பார்கள். இங்கு ஆஸ்பத்திரியும் சேர்ந்து போலியாக நடத்தப்பட்டுள்ளது. அதுவும் எப்படி திண்டுக்கல்லில் பலரும் வந்து சிசிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரியே போலி என்பதும் தெரியவந்துள்ளது. 10ம் வகுப்பு கூட முடிக்காத ஒரு பெண், திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் பெரிய மருத்துவமனையையே 22 வருடங்களாக நடத்தி வந்திருக்கிறார்.
என்ன நடந்ததது என்பதை பார்ப்போம்..திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பவானி கணேசன் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை பல வருடங்களாக இயங்கி வந்துள்ளதுது.. ஆனால் தமிழ்நாடு மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத்தின்படி நலப்பணிகள் இணை இயக்குனரிடம் உரிமம் பெறாமல் நடத்தப்பட்டு வந்துள்ளது.
இங்கு டாக்டராக பணியாற்றிய சித்ரா பிரியதர்ஷினி டாக்டர் இல்லை. எஸ்எஸ்எல்சி கூட முடிக்காத இவர் 1991-ல் உயிரிழந்த பிரபல மருத்துவரின் ஹாஸ்பிடலை வாங்கி, "சித்ரா" எனும் தன் பெயரை, இறந்த மருத்துவரின் பெயருக்கு மாற்றி, 20 ஆண்டுகளாக சான்றிதழ் மற்றும் உரிமம் உள்ளிட்ட ஆவணமும் இல்லாமல் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார்.
சோதனைக்கு அதிகாரிகள் சென்ற போது அந்த மருத்துவமனைக்கு தொடர்பே இல்லாத மகப்பேறு மருத்துவத்திற்கான உபகரணங்கள், மாத்திரைகள் இருந்தன. ஆயுர்வேதம், சித்தா தொடர்பான காலாவதியான மாத்திரைகளும் இருந்திருக்கின்றன. அதை பார்த்த பின்னரே சித்ராவின் தில்லாலங்கடி வேலை அம்பலத்துக்கு வந்தது.
இதையடுத்து போலி மாத்திரிகளை பறிமுதல் செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். மேலும் திண்டுக்கல் மாநகர் நல அலுவலர் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் மற்றும் போலீசார் போலி டாக்டர் சித்ரா பிரியதர்ஷினி மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
20 வருடங்களாக திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் இந்த ஆஸ்பத்திரி இயங்கி வந்துள்ளது. ஆபரேஷன் எல்லாம் செய்தாரா? கொரோனா காலத்தில் என்ன செய்தார்.. 20 வருடமாக எப்படி ஏமாற்ற முடியும் ?மற்ற டாக்டர்கள் கண்களுக்கு இது எப்படி தெரியாமல் இருக்க முடியும்? ஏதோ கிராமம் என்றால் கூட சரி . திண்டுக்கல் போன்ற பெரிய நகரில் எப்படி இத்தனை வருடங்கள் ஏமாற்றினார் என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார்..












Click it and Unblock the Notifications