திண்டுக்கல்லில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை..முகத்தையே குறிவைத்த கும்பல்! பட்டப் பகலில் நடந்த கொடூரம்
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஒருவர் பட்டப் பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அந்த ரவுடியின் முகத்தை குறி வைத்து கொடூரமாக கொலை கும்பல் வெறியாட்டம் ஆடி இருக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பழிக்குப் பழி கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சிகுள்ளாக்கி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க பிரமுகருமான மாயாண்டி ஜோசப் என்பவர் இரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக அவரது முகத்தை குறிவைத்து கொலை கும்பல் சிதைத்து கொலை செய்தது. தற்போது அதேபோல ஒரு கொலை சம்பவம் திண்டுக்கல்லில் நடைபெற்றிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை அருகே காப்பிளியபட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, விவசாயியான இவரது மகன் தீனதயாளவர்மன். 28 வயதான இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகஜோதி என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தீனதயாளவர்மன் செல்போன் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அடிக்கடி திண்டுக்கல் நகரப் பகுதிகளுக்கு சென்று வந்த அவருக்கு சில ரவுடிகளின் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து செல்போன் தொழில் ஒரு பக்கம் இருக்க, சில லோக்கல் ரவுடிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல், வழிப்பறி என பாதை மாறி சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் கொலை வழக்கில் சிக்கி சிறை சென்று வந்துள்ளார். கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளிவந்த தீனதயாளவர்மன் தொடர்ந்து அப்பகுதியில் ரௌடியாக வலம் வந்திருக்கிறார்.
சிறு சிறு பிரச்சனைகளில் தலையிட்டு மாமுல் வசூல் செய்வது, சொத்து பிரச்சனைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வது என தொடர்ந்து அவரது அட்டூழியம் அதிகரித்து இருக்கிறது. இதை அடுத்து அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில நாட்களாக தீனதயாளவர்மன் அப்பகுதியில் இருந்தாலும் தலைமறைவாகவே இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்று காலை காப்பிளியபட்டி அருகே இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைக்கு பின்புறம் உள்ள குளத்துப் பகுதியில் ரத்த வெள்ளத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. ஆடு மேய்ப்பவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து வடமதுரை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளர் தெரியாத அளவுக்கு அரிவாள் கத்தி போன்ற பயங்கர ஆதங்களால் ஆயுதங்களால் முகமும் தலையும் சிதைக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து இடத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கொலை செய்யப்பட்டது ரவுடியான தீனதயாளவர்மன் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அப்பகுதியில் ஏராளமானவர்கள் திரண்டனர். குறிப்பாக தீனதயாளவர்மனின் குடும்பத்தினர் அவரது உடலை கண்டு கதறி துடித்தனர். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே கொலை, கட்ட பஞ்சாயத்து என பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் தீனதயாளவர்மன் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, சிசிடிவி கேமரா காட்சி உதவியோடு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications