சின்னதாய் நடந்த தவறு.. கொடைக்கானல் விவசாயிக்கு ஒரு லட்சமாக மாறிய மின் கட்டணம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கூக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பழம்புத்தூர் என்ற கிராமத்தில் வசிக்கும் விவசாயி வீட்டுக்கு 92 யூனிட் மின் பயன்பாட்டிற்கு ரூ.1 லட்சம் கட்டணமாக வந்திருக்கிறது. பொதுவாக அவரது வீட்டிற்கு மின் கட்டணம் என்பதே வந்தது இல்லை.. ஏனெனில் 100 யூனிட்டிற்குள் தான் வரும் என்பதால் மின் கட்டணம் வராது. இப்போது ஒரு லட்சம் வந்திருப்பது மின் கணக்கீட்டில் நடந்த குளறுபடி என்று தகவல் வெளியாகி உள்ளது.
மின் கட்டணம் என்பது முதல் 100 யூனிட்டிற்கு கட்டணமே இல்லை.. கொடைக்கானல் போன்ற மலைப்பகுதி மக்களை பொறுத்தவரை, அவர்களுக்கு மின்சார பயன்பாடு, குளிர்சாதன பெட்டி பயன்பாடு சுத்தமாக இருக்காது. எனவே அவர்களுக்கு மின் கட்டணம் என்பது பொதுவாக குறைவாகவே வரும்.

மலை கிராமங்களை பொறுத்தவரை சாதாரண ஏழை மக்களுக்கு 100 யூனிட்டை தாண்டி மின்சார பயன்பாடு இருக்காது என்பதால், அவர்கள் மின் கட்டணம் என்பதை கட்டியதே இல்லை.. இந்நிலையில் கொடைக்கானல் அருகே விவசாயி வீட்டுக்கு ஒரு லட்சம் மின் கட்டணம் வந்திருக்கிறது. இரண்டு குண்டு பல்புக்கு ஒரு லட்சமா என்று அவர் அதிர்ந்து போனார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மேல்மலையில் கூக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பழம்புத்தூர் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களின் பிரதான தொழில் விவசாயம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் தனது வீட்டில் 2 மின் விளக்குகளை மட்டுமே உபயோகப்படுத்தி வந்திருக்கிறார். இதனால் அவரது வீட்டுக்கு ஒவ்வொரு முறையும் 100 யூனிட்டுக்கு குறைவாகவே மின்சார பயன்பாடு இருந்திருக்கிறது. இதனால் அவருக்கு மின் கட்டணம் பெரும்பாலும் வந்ததே இல்லை
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூக்கால் மற்றும் பழம்புத்தூர் கிராமத்தில் மின் கணக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மின்வாரியம் சார்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் மின் கட்டணம் குறித்த எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரின் செல்போன் எண்ணுக்கும் மின்சார வாரியத்தில் இருந்து எஸ்எம்எஸ் ஒன்று வந்தது. அதில், கடந்த 2 மாதங்களில் 9200 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தி இருப்பதாகவும், அதற்கு ரூ.1,01,580 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்து. இதனை பார்த்ததும் சந்திரசேகர் அதிர்ந்து போனார்.
இதையடுத்து நேற்று காலை அவர் கொடைக்கானல் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் மின் கட்டணம் பல மடங்கு அதிகமாக வந்தது குறித்து முறையிட்டிருக்கிறார். அப்போது தான் மின்சார வாரியம் சார்பில் மின் கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டதை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து கொடைக்கானல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கூறுகையில், "மின்சார கணக்கீட்டினை கணினியில் பதிவேற்றம் செய்யும்போது, மின்வாரிய ஊழியர் 92 யூனிட் என்பதற்கு பதிலாக கூடுதலாக 2 பூஜ்ஜியம் (00) சேர்த்து 9200 யூனிட் என்று தவறுதலாக பதிவேற்றிவிட்டார்கள். இதனால் மின் கட்டணம் அதிகமாக வந்திருக்கிறது இந்த கணக்கீடு பிழை குறித்து திண்டுக்கல் மின்வாரிய அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால் கணக்கீடு பிழை சரிசெய்யப்பட்டு, சந்திரசேகர் வீட்டின் மின் பயன்பாடு 92 யூனிட்டாக மாற்றப்பட்டுள்ளது. அதன்மூலம் அவர் இலவசமாக மின்சாரம் பெறுவார். எனவே அவர் கட்டணம் செலுத்த தேவை இருக்காது" என்று தெரிவித்தார்.
மின்வாரிய அதிகாரியின் இந்த தகவலை தொடர்ந்து சந்திரசேகர் நிம்மதி அடைந்துள்ளார். 92 யூனிட் மின் பயன்பாட்டிற்கு ரூ.1 லட்சம் கட்டணம் வந்த சம்பவம் பழம்புத்தூர் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications