திண்டுக்கல்லில் அரசாங்கத்திற்கே தெரியாமல் 3 அணைகள் கட்டிய கரூர்காரர்.. ஆடிப்போன அரசு அதிகாரிகள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கோம்பை அணைக்குச் செல்லும் ஓடையை மறித்து அனுமதியின்றி கரூரைச் சேர்ந்த குணசீலன் என்ற நபர் தடுப்பணைகள் கட்டி உள்ளார். அப்பகுதி விவசாயிகள் அளித்த புகாரின்பேரில், 5 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு தடுப்பணைகளை அகற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக இறங்கி உள்ளார்கள். சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
அரசுக்கே தெரியாமல் தனிநபர் ஒருவர் தடுப்பணை கட்டியிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவில் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கோம்பை அணை பகுதிக்குச் செல்லும் நீரோடை மலைப்பகுதியிலிருந்து வரும் முக்கிய நீர் ஆதாரத்தை தடுத்து கட்டியிருக்கிறார் கரூரைச் சேர்ந்த குணசீலன் என்ற தனிநபர்.

கரூரைச் சேர்ந்த குணசீலன் கோம்பை அணைக்கு செல்லும் நீரோடையின் அருகே நிலம் வாங்கியுள்ளாராம். அவர் தனது நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக அல்லது நிலத்தின் மதிப்பை உயர்த்த, பொதுவான ஓடையை மறித்து அனுமதியின்றி மூன்றுக்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அணைக்கு வரும் நீர் தடைபடும் என அஞ்சும் விவசாயிகள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அதிகாரிகளின் ஆய்வில் விதிமீறல் உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
விவசாயிகள் எதிர்ப்பு
ஆத்தூரில் உள்ள கோம்பை அணையை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இருக்கின்றன. தனிநபர் ஒருவர் பொது ஓடையை ஆக்கிரமிப்பது தங்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயல் என உள்ளூர் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
விதிமீறல்
பொதுவாக நீர்வளத் துறை அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல், இயந்திரங்களைக் கொண்டு ஓடையின் போக்கை மாற்றியது சட்டப்படி குற்றமாகும். இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் பரவியதை அடுத்து, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தலையிட்டது,
ஜேசிபிக்கள் விரைந்தன
வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் அந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தால், ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்பணைகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தனிநபர் மீது நில ஆக்கிரமிப்பு மற்றும் நீர்நிலைகளைச் சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 5 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு தடுப்பணைகளை அகற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக இறங்கி உள்ளார்கள்












Click it and Unblock the Notifications