விதம் விதமாக பிரச்சாரம் செய்து வந்த மன்சூர் அலிகான்.. திடீர் உடல் நலக்குறைவு
உடல்நலக்குறைவு காரணமாக மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்: நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார் நடிகர் மன்சூரலிகான். தினம் ஒரு வித்தியாசம்.. தினம் ஒரு தோற்றம்.. தினம் ஒரு யுக்தியில் பிரச்சாரம் செய்து தொகுதி மக்களை ஈர்த்து வருகிறார்.

வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தொகுதிக்குள் சென்று களப்பணியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். அப்போது முதலே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிலேயே மிக முக்கியமான வேட்பாளராக இவர் தன்னை முன்னிறுத்தி வருகிறார்.
இந்நிலையில், சர்க்கரை நாயக்கனூர், கமலாபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பின்னர் அழகம்பட்டியில் மன்சூர் அலிகான் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கிருந்த கட்சியினரும், பொதுமக்களும் பதட்டமடைந்து உடனடியாக மன்சூர் அலிகானை நிலக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. எனினும், பிரசாரத்தின் போது மன்சூர் அலிகான் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications