“பெரியப்பா கால்ல விழு”.. ஐ.பெரியசாமியிடம் மகனை ஆசி வாங்கச் சொன்ன அதிமுக மாஜி திண்டுக்கல் சீனிவாசன்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி காலில் விழுந்து ஆசி பெற்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன்.
திண்டுக்கல் நகரில் உள்ள மேட்டுப்பட்டியில் 300 வருடங்களுக்கு மேல் பழமையான புனித வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாஸ்கா திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அமைச்சர் ஐ.பெரியசாமி, பழனி எம்.எல்.ஏவும் ஐ பெரியசாமி மகனுமான ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் மேயர் இளமதி, திண்டுக்கல் திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இந்த விழாவில் பங்கேற்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் தொகுதி அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் அமைச்சர், முன்னாள் அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட நிலையில், இரு தரப்பினரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்து, நலம் விசாரித்துக் கொண்டனர். தொடர்ந்து, அங்கு நாற்காலிகளில் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது இளைய மகன் சதீஷை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அறிமுகப்படுத்தினார். மேலும், 'பெரியப்பா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கு' என்று தனது மகனிடம் கூறினார். அவரது மகன் சதீஷ் சற்றே தயங்கி அமர்ந்திருந்த ஐ.பெரியசாமியின் முழங்காலைத் தொட்டு வணங்கினார். 'நன்றாக காலில் விழு' என முன்னாள் அமைச்சர் சிரித்தபடி அதட்ட, மீண்டும் அமைச்சர் ஐ.பெரியசாமியின் காலைத் தொட்டு ஆசி பெற்றார் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் சதீஷ்.
பின்னர், அருகிலிருந்த திமுக மாவட்டச் செயலாளரும் ஐ.பெரியசாமியின் மகனுமான ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ.வை இது அண்ணன் என்றும், அருகில் இருந்த மேயர் இளமதியை அக்கா என்றும் தனது மகனுக்கு திண்டுக்கல் சீனிவாசன் அறிமுகப்படுத்தினார். அப்போது, 'இவனுக்குதான் இந்த முறை சீட் வாங்கலாம் என்று இருந்தோம்.. அதற்குள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விட்டனர்' என அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல் சீனிவாசனுடன் இருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனும் அமைச்சர் ஐ.பெரியசாமியும் கைகொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். திமுக, அதிமுக என எதிரெதிர் துருவங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கட்சி வேறுபாடின்றி ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
திண்டுக்கல் மாவட்ட அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட தலைவரான திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் கோலோச்சி வரும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது மகனை ஆசி பெறச் செய்தது, அரசியல் பாகுபாடுகளை தாண்டி அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications