நீட் தேர்வால் கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை! உளறிக் கொட்டிய மாஜி திண்டுக்கல் சீனிவாசன்! ஷாக்கான ர.ர.!
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மாணவி நீட் தேர்வுக்கு பயந்து தான் தற்கொலை செய்து கொண்டதாக அதிமுகவின் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து 25ஆம் தேதியான இன்று அதிமுக சார்பில் கட்சி அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி அதிமுக சார்பில் இன்று பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னை,தேனி, தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளர், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்து வரும் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில், திண்டுக்கல் திருச்சி சாலையில் கல்லறைமேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட ஆயிரம் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் சீனிவாசன்
மேலும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளான திண்டுக்கல் மாவட்ட முன்னாள் செயலாளரும் முன்னாள் மேருமான மருதராஜ், அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் விபிபி பரமசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் அழைத்துவரப்பட்டிருந்த நிலையில் இந்தக் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சு தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "நடைமுறைக்கு சாத்தியமில்லாத பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்து விடுவோம் என கூறினார்கள். ஆனால் ஒழிக்கவில்லை, தற்போது கள்ளக்குறிச்சி மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்" என பேசினர். இதனால் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நீட் தேர்வால் தற்கொலை
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உலாவும் நிலையில், ஒரு முன்னாள் அமைச்சர் நீட் தேர்வால் தான் உயிரிழந்தார் எனப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மட்டுமல்ல கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசம் சர்ச்சை செயல்களுக்கும், பேச்சுகளுக்கும் பெயர் போனவர், ஆப்பிள் சின்னத்துக்கு இரண்டு முறை ஓட்டு கேட்டது, பழங்குடியின சிறுவனை செருப்பு மாட்டி விட சொன்னது, அம்மா எங்களுக்கு ஸ்வீட் கொடுத்தார் உள்ளிட்ட சர்ச்சை பேச்சுகளால் இந்திய அளவில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications