"மன கொடுமை.. புனிதமான கடமை.!" பெற்றோரை பிரிக்க முயன்றால் விவாகரத்து கோரலாம்! கொல்கத்தா ஐகோர்ட்
கொல்கத்தா: எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் பெற்றோரை விட்டு விலகி இருக்க வேண்டிய கட்டாயப்படுத்தினால் மனக் கொடுமை ஏற்படுத்துவதாகக் கோரி விவகாரத்து கோரி மனுத் தாக்கல் செய்யலாம் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, என்ன நடந்தாலும் அவருடனேயே இருக்க வேண்டும் என்ற காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது. உறுதுணையாக இருப்பது வேறு, என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டிருப்பது வேறு..

ஒருவருடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றாலும் அதற்காக அவர்கள் செய்யும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டும் அர்த்தமில்லை என்ற புரிதல் பலருக்கும் வரத் தொடங்கியுள்ளது.
விவகாரத்து : அதேநேரம் மறுபுறம் ஏதேதோ காரணங்களுக்காக விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்வதும் அதிகரித்தே வருகிறது. இதனிடையே பெற்றோரை வலுக்கட்டாயமாகப் பிரிக்க மனைவி முயன்றால் அதைக் காரணமாகச் சொல்லி விவாகரத்து மனுத் தாக்கல் செய்யலாம் எனக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் பெற்றோரை விட்டு விலகி இருக்க வேண்டிய கட்டாயப்படுத்தினால் மனக் கொடுமை ஏற்படுத்துவதாகக் கோரி விவகாரத்துக் கோரி மனுத் தாக்கல் செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது கணவருக்கு விவாகரத்து வழங்கிய குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்யும் போதே நீதிமன்றம் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு: கடந்த மார்ச் 31ஆம் தேதி நீதிபதிகள் சௌமென் சென் மற்றும் உதய் குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த கருத்தை கூறியிருந்தனர். இப்போது தான் இந்த தீர்ப்பின் தகவல்கள் வெளியாகியுள்ளது. 2009ஆம் ஆண்டு மேற்கு மிட்னாபூரில் உள்ள குடும்ப நல நீதிமன்றம் அவரது மனைவி ஜர்னாவிடம் இருந்து பிரசாந்த் குமார் மண்டலுக்கு விவாகரத்து வழங்கியது. மனைவி கொடுமைப்படுத்தியதாகக் கூறி தீர்ப்பு வழங்கியிருந்தது.
அவர்கள் இருவருக்கும் 2001ஆம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. அப்போது முதலே பொது இடத்தில் வைத்து அந்த பெண் தனது கணவரை இழிவுபடுத்தியுள்ளார். "வேலையற்றவர்" என்றும் கோழை என்றும் பொது இடத்தில் வைத்துத் திட்டியுள்ளார். அப்போது அவர் பள்ளியில் பகுதி நேரமாக ஆசிரியராக இருந்துள்ளார். அப்போது அவருக்குக் கிடைத்த வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவியும் வேலைக்குச் சென்று சம்பாதித்துள்ளார்.

என்ன வழக்கு: பிரசாந்த் அரசு வேலைக்குச் சேர இருந்த நிலையில், அவருக்கு எதிராக அவரது மனைவி "சித்திரவதை" செய்வதாக கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, அவருக்கு வேலை கிடைப்பதைத் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பெற்றோர்களை உடன் வைத்திருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். இதையெல்லாம் காரணங்களாகக் குறிப்பிட்டே குடும்ப நல நீதிமன்றம் அவர்களுக்கு விவகாரத்து வழங்கியுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மனைவி தாக்கல் செய்த மனுவை தான் இப்போது கொல்கத்தா உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
ஒரு மகன் தனது பெற்றோருடன் வாழ்வது இந்தியக் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையில் முற்றிலும் இயல்பானது என்று கூறி மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர். மேலும், பெற்றோரைப் பராமரிப்பது மகனின் புனிதமான கடமை என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications