சைரன் வைத்த கார்.. கேட்டா ஆணையராம்.. ஐடி கார்டுல உதவி ஆணையர்னு இருக்கு.. அலேக்காக தூக்கிய போலீஸ்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே போலி உதவி கமிஷனரை கைது செய்தனர். மேலும் அவரிடம் சைரன் வைத்த போலீஸ் வாகனத்தையும் போலி துப்பாக்கியையும் அடையாள அட்டையையும் பறிமுதல் செய்தனர்.
Recommended Video
சென்னை கொளத்தூர் ஜீவா நகரை சேர்ந்த சின்னன் மகன் விஜயன் (40). இவர் இன்று அதிகாலை தேனியில் இருந்து சென்னை நோக்கி பொலிரோ ஜீப்பில் சென்றார். அப்போது வத்தலகுண்டு- திண்டுக்கல் சாலை லட்சுமிபுரம் டோல்கேட் அருகே பட்டிவீரன்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

ஜீப்பில் போலீஸ் என எழுதியிருந்தது
அப்போது ஜீப்பில் போலீஸ் என எழுதப்பட்டு சைரன் வைத்த வாகனத்தில் விஜயன் வந்து கொண்டிருந்தார். அவர் வாகனத்தை சோதனை செய்த போலீசார் அவரிடம் யார் என்று கேட்டபோது தான் போலீஸ் என்று கூறியுள்ளார். போலீசார் மீண்டும் விசாரணை செய்த போது தான் சென்னை உதவி ஆணையர் என்று கூறியுள்ளார். மேலும் அங்கிருந்த போலீஸாரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

சந்தேகத்தின் பேரில் விசாரணை
சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போலீசார் அவரிடம் இருந்த அடையாள அட்டையை பார்வையிட்டதில் அது போலி என தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. விஜயனை விசாரணை செய்த திண்டுக்கல் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரன் தலைமையில் நிலக்கோட்டை காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் பொறுப்பு ராஜபாண்டி, வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் தனிப்பிரிவு போலீசார், சிபிசிஐடி போலீசார், தீவிர விசாரணை செய்தனர்.

காவல் துறை உயரதிகாரியாக சித்தரிப்பு
அதில் இவா் தன்னை காவல்துறை உயர்அதிகாரி போல் காட்டிக்கொண்டு சிறு சிறு பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், சமூக ஆர்வலர் போல் சேவை செய்தும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்தும் அதை விளம்பரபடுத்தியும் வந்தது தெரியவந்துள்ளது. இது போல் அவர் மற்ற மாநிலங்களுக்கும் பயணித்தது தெரியவந்தது. போலியான போலீஸ் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு கேரளாவில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு தரிசனம் பெற்றதாகவும் சிறப்பு சலுகையை பெற்றதாகவும் தெரியவந்தது.

விஜயன் கைது
கைது செய்யப்பட்ட விஜயனை அரசு மருத்துவமனையில் கோவிட் பரிசோதனை செய்து பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விஜயனை நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். சைரன் வைத்த கார், போலி ஐடி கார்டு, துப்பாக்கி உள்ளிட்டவற்றுடன் விஜயன் இத்தனை நாட்களாக சுற்றி திரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications