ஸ்ட்ரைட்டா மோடியிடம்.. ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கை! கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுங்கள்"
திண்டுக்கல்: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
பிரதமர் மோடி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலமாக வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்திலிருந்து வருகை தந்து பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக சின்னாளபட்டி சென்று அங்கிருந்து காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இடத்திற்குச் சென்றார். ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மூர்த்தி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மு.க.ஸ்டாலின் பேச்சு
இதனைத்தொடர்ந்து தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பின்னர் மாணவர்கள், இளையராஜா, உமையாள் சிவராமன் ஆகியோருக்கு பிரதமர் மோடி பட்டம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. கலை, அறிவியல், பொறியியல், விளையாட்டு, மருத்துவம், மீன்வளம், தமிழ் வளர்ச்சி, சட்டம், வேளாண்மை, இசை ஆகிய துறைகளின் கீழ் திறம்பட செயல்பட்டு வருகின்றன. உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

தமிழக அரசின் கல்வி திட்டங்கள்
இதனை மேலும் வலிமைப்படுத்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பெண்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு, ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் பயில நிதி உதவி திட்டம், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, கல்லூரி கனவு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இவை தமிழக எல்லையை கடந்து அனைத்து மாநிலங்களும் கவனிக்கும் வகையில் தமிழகத்தின் கல்வித் திட்டங்கள் உள்ளன.

மாநில பட்டியலில் கல்வி
கல்வி என்ற செல்வத்தை மட்டுமே ஒருவரிடம் இருந்து யாராலும் எந்த சூழ்நிலையிலும் பிடுங்க முடியாது. அதற்கேற்ப கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு மத்திய அரசு கொண்டு வர வேண்டும். ஏனென்றால் அரசியலமைப்பு சட்டம் கொண்டு வந்தபோது கல்வி மாநில அரசின் பட்டியலில் மட்டுமே இருந்தது. ஆனால் எமர்ஜென்சி காலத்தில் கல்வி மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனால் பிரதமர் மோடி, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து ஒலிக்கும் திமுக குரல்
நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதில் இருந்து கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற திமுகவின் குரல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக திமுக எம்எல்ஏ எழிலன் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியிடமே முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளது பல்வேறு தரப்பினரின் கவனத்தை திருப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications