பிஞ்சு குழந்தை உள்ளிட்ட 6 உயிர்களை காவு கொண்ட தீ..உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு! முதல்வர் ஆறுதல்!
திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள சிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒரு குழந்தை உள்ளிட்ட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் - திருச்சி சாலையில் அமைந்துள்ள (சிட்டி மருத்துவமனை) தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை ரிசப்சனில் இருந்து சென்ற கம்ப்யூட்டர் வயரில் தீப்பற்றி, பேட்டரி வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையின் உள்ளே நோயாளிகள் உட்பட நூறுக்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில் தீ விபத்தில் சிக்கிய நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியேற முயன்றனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனை லிப்டில் இருந்த ஐந்து பேர் மூச்சுத் திணறியும் ஒரு நபர் தீ விபத்திலும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த அனைவரும் விரைவாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும், விபத்து குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி , மாவட்ட ஆட்சியர் பூங்கொடி , பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் , பேரிடர் மேலாண்மை இயக்குனர் விசாகன் , திண்டுக்கல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதற்கிடையே உயிரிழந்தவர்களின் உடல்கள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று (12-12-2024) இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த திரு.மணிமுருகன் (வயது 30) த/பெ.ஜெகநாதன், திருமதி. மாரியம்மாள் (வயது 50) க/பெ.ஜெகநாதன், தேனி மாவட்டம் சீலம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த திரு. சுருளி (வயது 50) த/பெ. கந்தசாமி, திருமதி.சுப்புலட்சுமி (வயது 45) க/பெ.சுருளி, திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த திரு.ராஜசேகர் (வயது 36) த/பெ.ராஜேந்திரன், செல்வி.கோபிகா (வயது 6) த/பெ. ராஜசேகர் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications