Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல்லுக்கு திமுக குறி.. ஆத்தூருக்கு அதிமுக ஸ்கெட்ச்! ஐ.பி.க்கு எதிராக களமிறங்குவது யார்?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வருகிறது. தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட முக்கிய மாவட்டமாக இருந்த திண்டுக்கல்லில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. திண்டுக்கல் தொகுதியை முதன் முறையாக கைப்பற்ற திமுக தயாராகி வரும் நிலையில், ஆத்தூரில் ஐ.பெரியசாமியை வீழ்த்த தயாராகி வருகிறது அதிமுக. ஐ.பெரியசாமிக்கு எதிராக நிற்கப் போகும் அந்த வேட்பாளர் யார்? என்ற கேள்விதான் தற்போது பொதுமக்களிடைய எழுந்திருக்கிறது.

2026 சட்டமன்ற தேர்தல் திமுக - அதிமுகவுக்கு வாழ்வா சாவா தேர்தல் தான். தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சித்து வரும் நிலையில் அதனை தடுக்க திமுக போராடி வருகிறது. அதே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சியை இழந்ததில்லை என்ற பெருமையை தக்க வைக்க எடப்பாடியும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

இதன் காரணமாக தங்கள் மாவட்டங்களில் திமுக-அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக துரைமுருகன், கேஎன் நேரு, எவ வேலு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட திமுக நட்சத்திர சீனியர்கள் தங்கள் மாவட்டங்களில் மிகத் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.

Dindigul I Periyasamy dmk

திண்டுக்கல்

அதேபோல அதிமுக தரப்பிலும் எஸ்பி வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் என கட்சிப் பணிகளில் பட்டையை கிளப்பி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்திய மாவட்டமான திண்டுக்கலில், முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது முதல் மக்கள் பிரதிநிதியையும், இரட்டை இலை சின்னத்தையும் பெற்றுக் கொடுத்தது திண்டுக்கல் தான். அதனால் திண்டுக்கல் தொகுதியை எப்போதும் அதிமுக விட்டுக் கொடுத்தது கிடையாது.

2026 தேர்தல்

இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் கிட்டத்தட்ட சரிசம பலத்துடன் தான் அதிமுகவும் திமுகவும் வெற்றி பெற்றிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளில் சில வேட்பாளர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். அதாவது திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன், ஆத்தூரில் ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் சக்கரபாணி என வெற்றி கொடி நாட்டி வருகின்றனர். மேலும் பழனி, வேடசந்தூர், நிலக்கோட்டை தொகுதிகளிலும் இரு கட்சிகளும் சம பலத்துடன் இருக்கிறது.

ஐ பெரியசாமி

இந்த நிலையில் இதுவரை வெற்றி பெறாத திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை வெற்றி பெற்று விட வேண்டும் என திமுக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. 2016, 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் களமிறங்க இருக்கிறார். அவரை வீழ்த்த நேரடியாக திமுகவே களமிறங்க வேண்டும் என்பதுதான் திமுகவினரின் எதிர்பார்ப்பு. அமைச்சர் ஐ பெரியசாமியின் மகன் ஐபி செந்தில்குமார், இல்லையேல் இளைஞரணியைச் சேர்ந்த யாராவது திண்டுக்கல்லில் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது.

ஆத்தூர் தொகுதி

இப்படி இருக்கையில், ஆத்தூரில் ஐ.பெரியசாமியை தோற்கடிக்க வேண்டும் என அதிமுக விரும்புகிறது. கடந்த தேர்தலில் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஐபி பெரியசாமி தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் அதற்கு முந்தைய தேர்தலில் ஆத்தூரில் ஜெயலலிதாவால் களமிறக்கப்பட்ட நத்தம் விஸ்வநாதன், 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியை சந்தித்தார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவின் பிகேடி நடராஜன் ஆத்தூரில் ஐ.பெரியசாமியை வீழ்த்தி இருந்தார்.

பாமக திலகபாமா

இதனால் ஐ.பெரியசாமியை வீழ்த்துவது ஒன்றும் முடியாத காரியம் இல்லை என அதிமுக நினைக்கிறது. கடந்த தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட திலகபாமா முறையாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளவில்லை என சொல்லப்பட்டது. மேலும் திமுகவுடன் ரகசிய டீலிங் வைத்துக் கொண்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இந்த முறை அதிமுகவே நேரடியாக ஆத்தூரில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் எம்எல்ஏ பிகேடி நடராஜன் இந்த தேர்தலில் போட்டியிடுவது இல்லை என முடிவு செய்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

அதிமுகவுக்கு சாதகமான முக்குலத்தோர் வாக்கு, வன்னியர், கவுண்டர் சமுதாய வாக்குகள் ஆத்தூரில் அதிகம் உண்டு. அதனால் தான் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முதலில் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டியில் முன்வைத்தார் எடப்பாடி பழனிசாமி. மேலும் பாமகவும் கூட்டணி இருப்பதால் கணிசமான வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு கிடைக்கும் , இதனால் ஆத்தூரில் அதிமுகவையே களமிறக்க முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் முடிவு செய்திருக்கின்றனர்.

Dindigul I Periyasamy dmk

வேட்பாளர் யார்?

ஆனால் ஐ.பெரியசாமியை எதிர்த்து களமிறங்க அதிமுக சீனியர்கள் யாரும் முன் வரவில்லை. இதனை அடுத்து புது முகங்களை களம் இறக்க தயாராகி வருகிறது அதிமுக தலைமை. அந்த வகையில் ஆத்தூர் தொகுதியில் ஐபிக்கு எதிராக சிவராம்குமார் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது. இவரது தந்தை முன்னாள் மாவட்ட கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முழுவதும் நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை எடுத்து செய்து வரும் சிவராம்குமார் கார் டீலராகவும் உள்ளார். ஆத்தூரில் பொதுவான சமூகமான கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த இவருக்கு வாய்ப்பு தர வேண்டுமென எடப்பாடி இடம் நேரடியாகவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வெற்றி கிடைக்குமா?

ஆத்தூர் தொகுதி பொறுப்பு மாவட்ட செயலாளரான நத்தம் விஸ்வநாதனும் இது தொடர்பாக பேசியிருக்கிறார் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி திண்டுக்கல் வந்தபோது சிவராம்குமார் அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். சமூக ஆதரவு, பணபலம், செல்வாக்கு ஆகியவை காரணமாக ஆத்தூரில் தனக்கு சீட் கிடைக்கும் என நம்பிய சிவராம் எடப்பாடி வந்திருந்த போது பிளக்ஸ் பேனர்கள், இளைஞர்களை திரட்டி வந்து தனக்கான ஆதரவு வட்டத்தை வெளி காட்டினார். இதனால் தலைமையின் கவனம் அவர் மீது விழுந்திருக்கிறது. ஐ.பெரியசாமி எதிர்த்துப் போட்டியிட அதிமுகவினர் யாரும் முன் வராத நிலையில் சிவராம்குமாரே களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் பலம் வாய்ந்த ஐ.பெரியசாமியை அவரது சொந்த தொகுதியிலேயே வீழ்த்த முடியாது என்கின்றனர் திமுகவினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+