திண்டுக்கல் கொடுமை! மாங்காய் திருடிய குரங்கு சுட்டுக் கொலை- சமைத்து சாப்பிட்ட இருவர் அதிரடி கைது!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் குரங்குகளை சுட்டுக் கொன்று கறி சமைத்து சாப்பிட்டதாக இருவரை சிறுமலை வனத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாந்தோப்பில் மாங்காய் திருடியதற்காக குரங்குகளை சுட்டுக் கொலை செய்து கறி சமைத்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் நடுவே அமைந்துள்ளது. திண்டுக்கம் மாநகரை ஒட்டி கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக சிறுமலை அமைந்துள்ளது. சிறுமலை அடிவார கிராமங்களில் ஏராளமான மாந்தோப்புகள் உள்ளன; அதேநேரத்தில் சிறுமலை பகுதிகளில் பிற பகுதிகளைவிட குரங்குகளின் அட்டகாசம் மிக அதிகமாகவே இருக்கின்றன.

இதனாலேயே திருமலைக்கேணி முருகன் கோவிலில் வலம் வந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான குரங்குகள் கூண்டு வைத்து வேட்டையாடப்பட்டு அழகர் கோவில் மலைப் பகுதியில் விடப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
இந்த பின்னணியில்தான் வீரசின்னம்பட்டியில் இருவர் குரங்கை சுட்டுக் கொன்று கறி சமைத்து சாப்பிட்டனர் என சிறுமலை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், வீரசின்னம்பட்டி ராஜாராம், தவசிமடை வடுகபட்டி ஜெயமணி ஆகியோரை கைது செய்தனர்.
இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேட்டரிங் மாஸ்டரான ராஜராமுக்கு சொந்தமான மாந்தோப்பில் குரங்குகள் அதிகமாக சேட்டை செய்து வந்துள்ளன. அதிலும் ஒரு குரங்கு நாள்தோறும் மாந்தோப்பில் வந்து மாங்காய்களை திருடி சாப்பிட்டதுடன் சேதப்படுத்தியும் வந்துள்ளது; இதனால் வடுகபட்டி ஜெயமணியை அழைத்து ரூ1,000 கொடுத்து குரங்குகளை சுட்டுக் கொல்ல பேரம் பேசியிருக்கிறார்.
இதனால் ஜெயமணியும் நாட்டு துப்பாக்கி மூலம் தினந்தோறும் சேட்டை செய்த குரங்கை அடையாளம் கண்டு சுட்டுக் கொன்றிருக்கிறார். இதிலும் ஆத்திரம் அடங்காத ராஜாராம், அவரது மாந்தோப்பிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட குரங்கை சமைத்தும் சாப்பிட்டிருக்கிறார் என இருவரும் தெரிவித்துள்ளனர்.
ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியாக குரங்கையும் கடிச்சிட்டீங்களே அப்புகளா!












Click it and Unblock the Notifications