அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! லோக்கலில் அடிதடி! எடப்பாடிக்காக கைகோர்த்த திண்டுக்கல் துருவங்கள்..!
திண்டுக்கல் : கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டுக்கல் அதிமுகவில் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எடப்பாடிக்கு ஒன்றாகச் சேர்ந்து ஆதரவு தெரிவித்து உள்ளனர். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் கூட இரு தரப்பினரும் முட்டி மோதிக்கொண்ட நிலையில் தற்போது அனைவரும் ஒன்றிணைந்து உள்ளனர்..
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் சுமூகத் தீர்வு எட்டப்படும் என்றே தெரிகிறது. இன்று மதியம் வரை விடாப்பிடியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதன்பிறகு தனது முடிவை லேசாக தளர்த்திக்கொண்டு நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலர் எடப்பாடி தரப்புக்கு தாவி அதிர்ச்சி வைத்தியம் நிலையில், சற்றே கலக்கத்தில் உள்ளார் ஒபிஎஸ். குறிப்பாக கேபி முனுசாமி, நத்தம் விசுவநாதன், மைத்ரேயன் ஆகியோர், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் எடப்பாடி தரப்புக்கு தாவி ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.

திண்டுக்கல் அதிமுக
ஆனால் அதில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா. இருக்கிறது. அதிமுகவைப் பொறுத்தவரை மாவட்டங்களில் கோஷ்டிப் பூசல்கள் தற்போது தான் இருக்கிறது என எண்ண வேண்டாம். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயலலிதா இருந்த போதே பலத்த கோஷ்டிப் பூசல் இருந்து வருகிறது. சர்ச்சைக்கும் அதிரடிப் பேச்சுகளுக்கும் பெயர்போன திண்டுக்கல் சீனிவாசனுக்கு முன் திண்டுக்கல் அதிமுகவில் கோலோச்சியவர் நத்தம் விஸ்வநாதன்.

திண்டுக்கல் சீனிவாசனுடன் மோதல்
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஐவர் அணியில் இடம் பெற்றிருந்த அவர் பின்னர் அவரது கோபத்துக்கு ஆளாகி ஆத்தூர் பகுதியில் ஐ.பெரியசாமி இடம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு அவரது செல்வாக்கு சரியத் தொடங்கியது. ஆனால் அதற்கு முன்னதாக திண்டுக்கல் அதிமுகவை மட்டுமல்ல தலைமை கழகத்திலேயே ஜெயலலிதாவுடன் நெருக்கம் காட்டியவர் திண்டுக்கல் சீனிவாசன், 3 முறைக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவி வகித்த அவர், அதிமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான பொருளாளர் பதவியையும் வகித்தவர்.

நத்தம் விஸ்வநாதன் டீம்
மாநில அரசியலில் இருப்பதால் உள்ளூர் அரசியலில் மாவட்டத்தைக் கவனித்துக்கொள்ள தனது சிஷ்யரான நத்தம் விஸ்வநாதனை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் தான் சீனிவாசன். ஆனால் அதற்குப் பிறகு உள்ளடி வேலைகளால் சடசடவென வளர்ந்த விஸ்வநாதன் பின்னர் தனது குரு திண்டுக்கல் சீனிவாசனையே ஓரம் கட்டினார். போக்குவரத்து துறை அமைச்சர் மின்சார துறை அமைச்சர் என 10 ஆண்டுகள் அமைச்சராக பதவி வகித்தார் நத்தம். பொருளாளர் பதவியிலிருந்து திண்டுக்கல் சீனிவாசன் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு திண்டுக்கல் அவைத் தலைவராக இருந்தார்.

ஆதரவாளர்கள் புறக்கணிப்பு
ஆனால் அந்த 15 ஆண்டுகளும் அவருக்கு வனவாசம் என்று சொல்லவேண்டும். கட்சி நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் திண்டுக்கல் சீனிவாசனை புறக்கணித்து வந்த நத்தம் விசுவநாதன் கட்சி மேடைகளில் கூட அவருக்கு இடம் கொடுக்காமல் புறக்கணித்தது திண்டுக்கல்லைச் சேர்ந்த அனைத்து அதிமுகவினருக்கு மே தெரியும். பின்னர் 2016 சட்டமன்ற தேர்தலின் போது மீண்டும் கட்சிக்குள் மறுபிரவேசம் செய்த திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியை கைப்பற்றினார். 100% வெற்றி வாய்ப்பை இருந்தும் நத்தம் தொகுதியில் தோல்வி உறுதி எனத் தெரிந்தே ஆத்தூரில் நிற்க வைக்கப்பட்டார் நத்தம் விசுவநாதன். எதிர்பார்த்தது போலவே தோல்வியைத் தழுவினார். இதையடுத்து மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.

ஏக பொருத்தம்
இதையடுத்து திண்டுக்கல்லில் மீண்டும் பவருக்கு வந்தார் திண்டுக்கல் சீனிவாசன். பின்னர் சசிகலாவுடன் ஏற்பட்ட மோதலால் நடைபெற்ற தர்ம யுத்தத்தின் போது ஓபிஎஸ் அணியில் சேர்ந்த நத்தம் விசுவநாதன் தொடர்ந்து அவருடன் பயணித்தார். அதன்பிறகு நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் நத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அதன்பிறகு ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கம் காட்ட தொடங்கினார். ஆனாலும் திண்டுக்கல் மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்களுக்கும் திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவாளர்களுக்கும் ஏக பொருத்தம் தான்.

முற்றிய மோதல்
நத்தம் விஸ்வநாதனால் வளர்த்து விடப்பட்ட பலரும் திண்டுக்கல் சீனிவாசன் தரப்புக்கு தாவிய நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அதிமுகவினருக்குள் அடிக்கடி மோதல் நிலவும். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றால்கூட நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்களை மேடையில் கூட ஏற விடாமல் தடுத்து தள்ளி விடுவதும், வாக்குவாதம் செய்வது என மோதல் களைகட்டும். அப்படித்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மோதல் வெளிப்படையாக வெடித்தது. திண்டுக்கல் முன்னாள் நகர செயலாளராக இருந்த ஒருவர், விஸ்வநாதன் அணியைச் சேர்ந்த ஒருவரை தள்ளிவிட வாக்குவாதம் மூண்டு இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

எடப்பாடிக்காக கைகோர்ப்பு
அப்போது கூட மதத்தின் பெயரைச் சொல்லி அந்த முன்னாள் நிர்வாகி திட்ட விவகாரம் விஸ்வரூபம் ஆனது. திண்டுக்கலில் தற்போது வரை அதிமுக தொண்டர்கள் மோதல் தனிப்பட்ட விரோதமாக நீடித்து வரும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்காக நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் கைகோர்த்துள்ளனர். கடந்த வாரம் ஓபிஎஸ் தரப்பில் இருந்த நத்தம் விசுவநாதன், அதன்பிறகு இபிஎஸ் அணியில் நிரந்தரமாக சேர்ந்துவிட்டார். இந்நிலையில்தான் வானகரத்தில் திருமண மண்டபத்தை தங்கமணி ஆய்வு செய்தபோது நத்தம் விசுவநாதன் திண்டுக்கல் சீனிவாசன் அருகருகே அமர்ந்து நட்பு பாராட்டினர். ஆனால் அவர்களுக்கு அடித்துக் கொண்ட தொண்டர்கள் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என புலம்பியபடி உள்ளனர்.












Click it and Unblock the Notifications