வேடசந்தூர் சிட்டிங் எம்எல்ஏ காந்திராஜனுக்கு சீட் மறுப்பு! திமுகவின் சாமிநாதன் வேட்பாளரானது எப்படி?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருக்கும் காந்திராஜன் ஓரங்கட்டப்பட்டு, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் டி.சாமிநாதனுக்கு சீட் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேடசந்தூரின் எம்எல்ஏவாக இருப்பவர் காந்திராஜன். கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். இவர் தொகுதி முழுக்க நிறைய பணிகளை செய்துள்ளார் என தெரிகிறது. எனினும் இந்த முறை காந்திராஜனுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஏன் மறுக்கப்பட்டது என்பதை பார்க்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த துணை முதல்வர் உதயநிதியின் காலில் காந்திராஜன் விழுந்தது சர்ச்சைக்குரிய வகையில் போனது. என்னதான் உதயநிதி இதை விரும்பாவிட்டாலும் அவரை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
எல்லாவற்றுக்கு மேல் அமைச்சர்களான ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோருடன் காந்திராஜன் இணக்கமாக இல்லை என சொல்லப்படுகிறது. இது ஒரு புறமிருக்க, வேடசந்தூர் தொகுதியில் வெல்லும் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்ற ஒரு கணிப்பு இருக்கிறது. அந்த வகையில்தான் கடந்த தேர்தலில் வேடசந்தூரில் காந்திராஜன் வென்றதால்தான் திமுக ஆட்சியை பிடித்தது என்ற ஒரு ராசி இந்த தொகுதிக்கு உள்ளது.
காந்திராஜன் வெற்றியால்தான் 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்தது என்கிறார்கள். இது நாம் சொல்லவில்லை. அந்த தொகுதியின் வரலாறு சொல்கிறது. அப்படியிருக்கும் போது காந்திராஜனுக்கு கொடுக்காமல் புதுமுகமான சாமிநாதன் வேட்பாளரானது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமைச்சர் சக்கரபாணியின் ஆதரவாளராக இருந்தவர் சாமிநாதன். இவர் மூலமாக செந்தில் பாலாஜியின் அறிமுகம், சாமிநாதனுக்கு கிடைத்ததாம். அவரது செயல்பாடுகள் செந்தில் பாலாஜிக்கு பிடித்து போனதால் அவரது குட் வில் புக்கில் சாமிநாதன் இடம் பெற்றாராம்.
செந்தில் பாலாஜியின் வீட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு அமலாக்கத் துறை ரெய்டு நடத்திய போது சாமிநாதன் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது என்றால் இருவருக்குமான நெருக்கத்தை யூகித்துக் கொள்ளுங்கள். வேடசந்தூர் சட்டசபை தொகுதி கரூர் மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது.
இதனால் மண்டல பொறுப்பாளரான செந்தில் பாலாஜியின் மூலம் சாமிநாதன் வேடசந்தூரில் சீட் பெற முயற்சித்தாராம். இது தலைமையின் காதுக்கு சென்றதால் அவரை அழைத்து அடக்கி வாசிக்கும் படி எச்சரிக்கப்பட்டதாம். இதனால் தனக்கு சீட் கிடைக்காதோ என்ற அச்சத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே கடந்த மாதம் சாமிநாதனை யாரோ கத்தியால் குத்த வந்த போது அந்த நபரை அவரே பிடித்து தனது காரிலேயே காவல் நிலையத்திற்கு கொண்டு போய் ஒப்படைத்தாராம். இந்த விஷயமும் திமுக தலைமைக்கு சென்றதாம்.
இந்த நிலையில்தான் வேடசந்தூர் திமுக வேட்பாளராக சாமிநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ வி.பி.பி.பரமசிவம் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். வேடசந்தூருக்கென ஒரு வரலாறு இருக்கிறது. இங்கு வெல்லும் கட்சியே ஆட்சியை பிடிக்கும்.
இது 1971 ஆம் ஆண்டு முதல் இப்படித்தான் நடக்கிறது. கடந்த 2011, 2016 ஆகிய ஆண்டு நடந்த தேர்தல்களில் கூட வேடசந்தூரில் அதிமுக வேட்பாளர் வென்றதால்தான் அதிமுக ஆட்சி அமைந்தது. அப்படியிருக்கும் போது திமுக சார்பில் புதியவர் களமிறக்கப்பட்டுள்ளதால் வேடசந்தூரில் முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்தை எதிர்கொண்டு வெல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என முதல்வர் உள்பட கூட்டணி கட்சியினரும் கூறி வரும் நிலையில் வேடசந்தூரில் சிட்டிங் எம்எல்ஏவை ஒதுக்கிவிட்டு புதியவருக்கு சீட் கொடுத்ததால் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications