வேடசந்தூர் தொகுதியை திமுகவுக்கு வாங்கித் தாங்க.. ஸ்டாலினிடம் வீடியோ காலில் துண்டுபோட்ட நிர்வாகிகள்
திண்டுக்கல்: சட்டசபை தேர்தலில் வேடசந்தூர் தொகுதியை வழக்கம் போல கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கிவிடாமல் இம்முறையாவது திமுகவுக்கு பெற்றுத் தர வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
கொரோனா லாக்டவுன் காலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து உரையாடி வருகிறார். இதில் கொரோனா கால நடவடிக்கைகள், கட்சி பணிகள் ஆகியவற்றை நிர்வாகிகள் விவரித்து வருகின்றனர்.
பெரும்பாலானோர் மு.க.ஸ்டாலின் 2021-ல் முதல்வராவார் என்ற நம்பிக்கையுடன் கருத்துகளை முன்வைக்கின்றனர். அதேபோல உட்கட்சி விவகாரங்கள், ஸ்டாலினின் ஹேர்ஸ்டைல் ஆகியவற்றை முன்வைத்தும் சிலர் கருத்துகளை கூறுகின்றனர்.
கொரோனா லாக்டவுன் 6.0: மோடியின் இன்றைய பேச்சின் சிறப்பம்சம் என்ன தெரியுமா
திமுகவுக்கு வேடசந்தூர் தொகுதி
இந்த வரிசையில் திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடினார். இதில் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீரா எஸ்.டி. சாமிநாதனும் பங்கேற்று பேசினார். அவர் தமது பேச்சின் போது, 2021 சட்டசபை தேர்தலில் வேடசந்தூர் தொகுதியை திமுகவுக்கு வாங்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஆதங்கத்துடன் முன்வைத்தார்.
வேடசந்தூரும் திமுகவும்
திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் தொகுதியானது திமுக கூட்டணியில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. 1971-ல் அதிமுக பிளவுபடாத நிலையில் திமுக இங்கு வென்றது. 1989-ல் அதிமுக பிளவுபட்ட நிலையில் மீண்டும் திமுக வென்றது. அதேபோல் 1996 தேர்தலில் அதிமுகவுக்கு எதிரான அலைவீசியபோதும் திமுக வென்றது.
7 முறை வென்ற அதிமுக
1971 முதல் 7 முறை இத்தொகுதியில் அதிமுக வென்றிருக்கிறது. 1977,1980, 1984 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை அதிமுக வென்றது. அதேபோல் 2011,2016 தேர்தல்களிலும் தொடர்ந்து அதிமுகவே வென்றது. 1991, 2001 தேர்தல்களிலும் அதிமுக வென்றுள்ளது.
காங்கிரஸுக்கு தராதீங்க
திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கே இத்தொகுதி மீண்டும் மீண்டும் கொடுக்கப்படுவது கட்சி நிர்வாகிகளிடையே ஒருவித சுணக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனை வெளிப்படுத்தும்விதமாக ஸ்டாலினுடனான இன்றைய வீடியோ கான்ஃபரன்ஸில் திமுகவினர் சார்பாக வேடசந்தூர் தொகுதியை திமுகவுக்கு பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.