மத்திய பிரதேசத்தில் வெற்றி பெற பாஜக ரூ.12,000 கோடி செலவு! தேர்தல் முடிவு பற்றி துரை வைகோ!
திண்டுக்கல்: மத்திய பிரதேசத்தில் வெற்றி பெற பாஜக ரூ.12,000 கோடி வரை செலவு செய்திருப்பதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளச் சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்கவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் மட்டும் அமலாக்கத்துறையை ஏவி பாஜக பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் துரை வைகோ சாடினார்.
ராஜஸ்தானில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை சில நாட்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்ததை சுட்டிக்காட்டிய துரை வைகோ, அதற்குள் இப்போது திண்டுக்கல்லில் மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றார்.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதிர்ச்சியில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றும் மதச்சாயம் பூசி தவறான தகவல்களை பரப்புவது தான் அரசியல் முதிர்ச்சியா என துரை வைகோ கேள்வி எழுப்பினார். இதனிடையே இன்று 4 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தில் வெற்றி பெற பாஜக பன்னிரெண்டாயிரம் கோடி வரை செலவு செய்துள்ளதாக துரை வைகோ குற்றஞ்சாட்டினார்.
ஆளுநர்களை பொறுத்தவரை அவர்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளர்களை போல் செயல்பட்டு வருகிறார்கள் என்று துரை வைகோ விமர்சித்தார். தேர்தல் வந்தால் மட்டும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு குறைக்கிறது என்றும் 2014ல் ரூ.400 க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் விலை 10 வருடத்தில் ரூ.1100 வரை உயர்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.












Click it and Unblock the Notifications