இலங்கையில் போராட்டம்.. நாளை இதே நிலைமைதான் இந்தியாவுக்கும்.. பாஜகவை எச்சரிக்கும் துரை வைகோ!
திண்டுக்கல் : பெட்ரோல் டீசல் விலை ஏற்றமானது இதேபோல் தொடர்ந்து நீடித்தால் இலங்கையில் ஏற்பட்டிருக்கக் கூடிய பொருளாதார சிக்கல் இந்தியாவிலும் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளதாக மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இடையே மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ அவர்கள் கட்சியின் வளர்ச்சி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

துரை வைகோ பேட்டி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பெட்ரோல் டீசல் விலையை பொறுத்தவரையில் மிகவும் மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கிறது அதாவது பெட்ரோல் 110 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த விலையேற்றத்தின் காரணமாக மூலப் பொருட்களின் விலையும் உயர்ந்து அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

விலை உயர்வு
மேலும் மூலப்பொருட்களின் விலை உயர்வு உற்பத்தி செய்வதற்கான செலவு மற்றும் போக்குவரத்து செலவு என அனைத்து செலவுகளும் உயர்வதால் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. உணவு விடுதிகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலை கடந்த வருடம் 1600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது ஆனால் தற்போது இரண்டு மடங்கு விலை உயர்ந்த 2400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்த கூடிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளதாக உணவு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விலையை குறைக்கவில்லை
மேலும் ஒன்றிய பாஜக அரசு இடம் இந்த பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் குறித்து கேட்கும்பொழுது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வின் காரணமாகவே இந்தியாவிலும் விலை உயர்ந்து வருவதாக கூறுகிறது. ஆனால் கடந்த வருடம் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 40 டாலருக்கு கீழ் குறைந்தது ஆனால் அப்போது எல்லாம் ஒன்றிய பாஜக அரசு இந்த விலையை குறைக்கவில்லை உயர்த்திக் கொண்டே தான் சென்றது.

இலங்கையின் நிலைமை
ஆனால் தற்போது கச்சா எண்ணெயின் விலை உயர்வின் காரணமாகவே பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்து வருவதாக கூறுவது எந்த விதத்தில் நியாயம். அத்தியாவசிய பொருட்களின் விலையை பொறுத்தவரையில் ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் அன்றாடம் அவற்றை வாங்கி பயன்படுத்தக்கூடிய ஏழை எளிய பொதுமக்கள் மிகவும் பாதிப்படைவார்கள். இந்த விலையேற்றத்தை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த தவறினால் இலங்கையில் என்ன பிரச்சனை நடக்கிறதோ அது இந்தியாவிலும் உருவாகக் கூடிய சூழ்நிலை உள்ளதாக அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications