பரந்தூர் விமான நிலையம் வந்தா தமிழகம் வளரும்.. உலகத்திலேயே நம்பர்-1.! அடித்துச் செல்லும் ஐ.பெரியசாமி!
திண்டுக்கல்: பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்திருப்பதை எடப்பாடி பழனிசாமி மறைக்க தமிழக அரசு மீது வீண் அவதூறு பரப்புகிறார் எனவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை, பரந்தூர் விமான நிலையம் மூலம் ஐ.டி துறை தமிழ்நாட்டில் வளர்ச்சி அடையும் அரசு வேலை மட்டும் இல்லாமல் 15 ஆயிரம் தனியார் வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
தமிழக எதிர்க் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, ஸ்டாலின் அரசு இன்றுவரை வழங்கவில்லை என்று நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.

அதற்கு பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்திருப்பதை எடப்பாடி பழனிசாமி மறைக்க தமிழக அரசு மீது வீண் அவதூறு பரப்புகிறார் என பதிலடி கொடுத்துள்ளார் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான ஐ.பெரியசாமி.
திண்டுக்கல் ஆர்.எம். காலணியில் உள்ள வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் ஏழை மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது. மத்திய அரசு. இதனால் இந்தியாவின் 10 மாநிலங்களில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சம்பளம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு மட்டும் 2024 டிசம்பர் 4 முதல் இன்று வரை நிதி வழங்கப்படவில்லை. இந்தத் திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது என்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் மத்திய அரசு வேண்டும் என்ற திட்டமிட்டு நிதி ஒதுக்காமல் இருக்கிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இதை கண்டித்து தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி. எஸ். நிதி ரூ.1056 கோடியை விடுவிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினார். மத்திய அரசை கண்டித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதிய போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி என்ன செய்து கொண்டிருந்தார். போர் பயத்தால் வீட்டிற்குள் பதுங்கி இருந்தாரா. மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து பழனிச்சாமிக்கு தெரியாதா?
புயல் வெள்ள நிவாரணம், கல்வி நிதி, 100 நாள் வேலைக்கான நிதி போன்றவற்றை ஒதுக்காமல் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைத்து வரும் பாஜக அரசோடு கள்ளக் கூட்டணி வைத்துக்கொண்டு அன்று முதல் இன்று வரை தமிழக மக்களுக்கு துரோகம் செய்வது வாடிக்கையாக வைத்துள்ளார் பழனிசாமி. பா.ஜ.க அரசை கண்டித்து இதுவரை பழனிசாமி ஏதாவது பேசி இருப்பாரா? அதற்கு அவருக்கு தைரியம் இருக்கிறதா? நிதி ஒதுக்காத மத்திய அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் கோபமாக இருப்பதை மடைமாற்ற டெல்லி உத்தரவுப்படி தமிழக அரசின் மீது குறை சொல்லி X தளத்தில் வெளியிட்டுள்ளார்.
உண்மையாக அக்கறை இருந்திருந்தால் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். பா.ஜ.க வோடு கள்ளக் கூட்டணி வைத்திருப்பதை மறைப்பதற்காக தமிழக அரசு மீது வீண் அவதூறு பரப்பி வருகிறார். பரந்தூர் விமான நிலையம் வருவதன் மூலம் ஐடி துறை தமிழ்நாட்டில் வளர்ச்சி அடையும் இதன் மூலம் அரசு வேலைகள் மட்டுமல்லாமல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் வேலைகள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது?
இந்தியாவில் குஜராத் மும்பை முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தாலும் உலக அளவில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருந்து வருகிறது? ஒரு வருடத்திற்கு முன்பாகவும் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடமாக இருந்து வந்தது தற்போது தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications