விநாயகா வேலையை காட்டிட்டியே! தலைவாழை இலை விலை கேட்டா தலையே சுத்துதுப்பா! மல்லிகைப் பூ அதுக்கு மேல!
திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினம் காரணமாக பூக்கள் விலை திடீரென அதிகரித்துள்ளது. மேலும், வரத்து குறைவு எதிரொலியாக,திண்டுக்கல்லில் வாழை இலை விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கட்டு வாழை இலை ரூ.4, 000 க்கு விற்பனை ஆகிறது.
நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்தியா முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட இருக்கிறது. தலைவாழை இலை போட்டு, கொழுக்கட்டை சுண்டல் ஆகியவற்றை விநாயகனுக்கு படைத்து பொதுமக்கள் வழிபடுவது வழக்கம்.
மேலும் வண்ண வண்ண பூக்களால் விநாயகரை அலங்கரித்து மக்கள் வழிபடுவார்கள். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 1400 ரூபாய்க்கும், முல்லை பூ 1200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நந்தியாவட்டை ஆயிரம் ரூபாய்க்கும், காக்கரட்டான் 600 ரூபாய்க்கும், சம்பங்கி ரூ. 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி
மேலும், வரத்து குறைவு எதிரொலியாக, திண்டுக்கல்லில் வாழை இலை விலை கிடு,கிடுவென உயர்ந்தது. ஒரு கட்டு வாழை இலை ரூ.4, 000க்கு விற்பனை ஆகிறது. திண்டுக்கல் மற்றும் வத்தலகுண்டு, சித்தையன்கோட்டை, ஆத்தூர், செம்பட்டி, ஆவாரம்பட்டி, வேடசந்தூர், எரியோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழை சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். வாழைக்காய்களுக்காக மட்டுமின்றி, இலை விற்பனைக்காகவும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
வாழை இலை
இந்த நிலையில் தற்பொழுது காற்றின் வேகத்தால் வாழை இலை மொத்த விற்பனை கடைகளுக்கு வரத்து குறைந்தது. மேலும் தொடர் முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இலைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த வாரத்தில் ரூ.1000 வரை விற்கப்பட்ட 250 இலைகள் கொண்ட ஒரு கட்டு, தற்போது ரூ.2,000க்கும், 1500க்கு விற்கப்பட்ட 400 இலைகள் கொண்ட ஒரு கட்டு தற்போது ரூ 4,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பண்டிகை தேவை
இவ்வாறு விற்பனை ஆகும் இலைகள் சாப்பாட்டு இலை, டிபன் இலை என 2 வகையாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.3க்கு விற்கப்பட்ட சாப்பாட்டு இலை ரூ.10-க்கு விற்கப்பட்டது. ரூ.2க்கு விற்கப்பட்ட டிபன் இலை தற்போது ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக காற்றின் வேகம் அதிகரித்ததால் ஏராளமான வாழை இலைகள் கிழிந்து விட்டது. இதனால் வாழை இலை வரத்து குறைந்துள்ளது. மேலும் தொடர் முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழை இலை உயர்வு அதிகரித்துள்ளது.
வாழை சாகுபடி
திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் வாழை இலை சில நாட்கள் வரை வாடாமல் இருக்கும். இதனால் இங்கு சாகுபடியாகும் வாழை இலைகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. ஆனால் தற்போது வரத்து குறைந்ததால் வாழை இலையின் விலை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இந்த விலை உயர்வு எங்களுக்கு போதுமானதாக இல்லை. திண்டுக்கல்லில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும் வாழை இலைகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் 250 இலை கொண்ட ஒரு கட்டு ரூ.3,000க்கு விற்பனை ஆகும் நிலையும் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications