இதுதாங்க தமிழ்நாடு! திண்டுக்கல் சிறுவனின் வாழ்க்கையை மாற்றிய அரசின் திட்டம்! சிலிர்க்க வைத்த சம்பவம்
திண்டுக்கல்: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலம் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் திண்டுக்கல்லில் உள்ள உடல், மன ரீதியான மாறுபாடு கொண்ட ஒரு சிறுவனின் வாழ்க்கையையே மாற்றி உள்ளது.
தமிழ்நாட்டில் எப்போதும் முற்போக்கான திட்டங்கள், inclusive திட்டங்கள் எனப்படும் எல்லா பிரிவினரையும் உள்ளடக்கும் திட்டங்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். மற்ற மாநிலங்கள் 30 வருடம் கழித்து யோசிப்பதை தமிழ்நாடு இன்றே யோசித்து செய்து இருக்கும். அது திமுகவாக இருந்தாலும் சரி.. அதிமுகவாக இருந்தாலும் சரி.

சத்துணவு திட்டத்திற்கு வழி போட்டது தமிழ்நாடு.. இப்போது இலவச பெண் பேருந்து திட்டம்.. மகளிர் உரிமை தொகை என்று பல மாநிலங்கள் கொண்டு வரும் திட்டத்திற்கு வழி போட்டது தமிழ்நாடு. காலை உணவு திட்டத்திற்கும் தமிழ்நாடுதான் ஆணி வேர். இப்படி தமிழ்நாடு பல துறைகளில் மக்களின் பங்கேற்பை, மக்கள் நலனை மனதில் வைத்து திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலம் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் திண்டுக்கல்லில் உள்ள மன ரீதியான மாறுபாடு கொண்ட ஒரு சிறுவனின் வாழ்க்கையையே மாற்றி உள்ளது.

திண்டுக்கல் சிறுவனின் வாழ்க்கை: இது தொடர்பாக ஊடகவியலாளர் அதிஷா செய்துள்ள போஸ்ட் ஒன்றில், திண்டுக்கல்லில் எனக்கு தெரிந்த பெண் அவர். அவருடைய மகனுக்கு பிறந்ததில் இருந்தே மனச்சவால் குறைபாடு, அவனால் தன்னுடைய உடலை கட்டுப்படுத்தி செயலாற்றவும் மற்றவர்களோடு தொடர்புகொள்வதிலும் சிக்கல்கள். அதனால் எப்போதும் வீட்டிலேயே முடங்கி கிடப்பான். பெரும்பாலும் படுக்கைதான். பல சிகிச்சைகள் செய்தும் பெரிய பலனில்லை. பையனின் எதிர்காலம் பற்றியும் இவனை என்ன செய்வது என்பதைப்பற்றியும் வருத்தப்பட்டுக்கொண்டேயிருப்பார். குறைஞ்ச பட்சம் பேச, நடக்க செஞ்சாக்கூட போதும்ண்ணே, சாமி கும்புட்டாச்சு டாக்டர்களை பார்த்தாச்சு ஒன்னும் நடக்கலை என விசனப்படுவார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதெல்லாம். அப்போது பையனை சிறப்புப் பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்திக்கொண்டிருந்தேன். அவர் லோயர் மிடில்கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பிரத்யேகமான பள்ளிகளுக்கும் அனுப்ப இயலவில்லை. லட்சம் லட்சமா கேட்க்குறாங்கண்ணே, சரிப்பட்டுவரலண்ணா எவ்ளோ காலம் குடுத்துட்டே இருக்கமுடியும் என்பார். ஒரு சில பொதுப் பள்ளிகளில் சேர்த்தும் பார்த்தார், ஆனால் எதுவும் சரிப்பட்டுவரவில்லை என்பதால் வீட்டிலேயேதான் வைத்திருந்தார். அவனுமே எப்போதும் சோகமாகவே அமர்ந்திருப்பான்.

சமீபத்தில் சந்தித்தபோது பையன் ஓரளவு நிற்கவும் கொஞ்சமா நடக்கவும் தொடங்கி இருந்தான். தட்டுதடுமாறி தான் நினைப்பதை சொல்லவும் செய்தான். அவனிடம் தெரிந்த மாற்றம் ஆச்சர்யமாக இருந்தது. பையனை பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டதாக சொன்னார் பையனின் அம்மா. ''திண்டுக்கல்லில் இருக்கிற ஒரு கவர்மென்ட் ஸ்கூலில் சேர்த்துட்டோம்ண்ணே, நல்லா இம்ப்ரூவ் ஆகிட்டாம்ண்ணே, முன்ன மாதிரி இல்ல, டிவி பாக்குறான் பயலுகளோட விளையாடறான், பாட்டு கூட பாடறான்'' என்று அவ்வளவு சந்தோஷம் அந்த அவர் முகத்தில். அவ்வளவு பெருமிதமும். பையன் பாடிக்காட்டினான்.
எப்படி நடந்தது இந்த மாற்றம். அரசுப்பள்ளிகளில் Inclusive education என்கிற ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுபற்றி பெரிதாக யாருக்கும் தெரிவதில்லை. இது ஆட்டிசம், மனச்சவால் மாதிரியான சிக்கல்கள் கொண்ட குழந்தைகளுக்கும் கல்வி அறிவும், சமூகத்தொடர்பும் கிடைப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கிற முன்னோடியான திட்டம். இதில் இத்தகைய மனச்சவால் நிறைந்த குழந்தைகளை கண்டறிந்தும், அவர்களாக முன்வந்து சேரும்போதும், அவர்களை உடனே பள்ளிகளில் அனுமதிப்பதில்லை.

ஏன் அப்படி? மனச்சவால் பிரச்சனைகள் நிறைந்த குழந்தைகளை திடீரென்று பள்ளிகளில் விடுவதால் பொதுவான குழந்தைகளோடு சேர்ந்து படிப்பதும், அவர்களோடு தொடர்பு கொள்வதும் சாத்தியமாவதில்லை. பல குழந்தைகள் அச்சத்தில் சிக்கிக்கொள்வதும், பள்ளிக்கு போக மறுப்பதும் அதிகமாக இருக்கிறது. அதனாலேயே இந்தக்குழந்தைகளிடம் இடைநிற்றல் விகிதம் 90% அளவுக்கு அதிகம்.
அதனால் அரசு இதை சரிசெய்ய இக்குழந்தைகளுக்கு அட்மிஷன் போட்டதும் முதலில் பள்ளி ஆயத்த மையங்களுக்கு அனுப்புகிறார்கள். பள்ளி ஆயத்த மையம் என்கிற ஒன்றையும் மாநிலம் முழுக்க உருவாக்கி இருகிறார்கள். அங்கே இந்தக்குழந்தைகளின் பிரச்சனைகளை அறிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி முதலில் அடிப்படையான சிகிச்சைகள், பிஸியோதெரபி, ஸ்பீச் தெரபி மாதிரியான உதவிகள் செய்கிறார்கள். இதெல்லாம் செய்வதோடு பள்ளிபற்றியும் அங்கே என்ன செய்யவேண்டும் என்பதையும் பொறுமையாக நல்ல மனநல ஆலோசகர்கள் மூலம் கற்றுத்தந்து குழந்தைகளை பொறுமையாக தயார் செய்கிறார்கள். அதற்கு பிறகே பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புகிறார்கள்.
பள்ளிக்கு சென்றபிறகும் குழந்தைகளை தொடர்ந்து கண்காணிப்பதும், அவர்களுக்கு மருத்துவமுகாம் மூலம் உதவிகள் செய்வது என கவனிப்பு தொடர்கிறது.

திண்டுக்கல் பையனையும் அப்படிதான் ஆயத்த மையத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள். அவன் அங்கே சென்ற பிறகு இப்போது ஓரளவு இம்ப்ரூவ் ஆகி இருக்கறான். இதுபோன்ற மனச்சவால்களை குணமாக்கமுடியாவிட்டாலும் சமூகத்தோடு தொடர்புகொள்ளவும், அவர்களை எதிர்காலத்துக்கென தயார் செய்யவும் இந்த அரசுப் பள்ளிகள் உதவுகின்றன.
இதில் பையனின் அம்மா ஒரு விஷயத்தை சொன்னார், ''முன்னெல்லாம் அவனுக்கு எல்லாமே நாமேதான் பண்ணிவிடணும் இப்ப அவனே சாப்பிடறான், அவனே உடை மாத்திக்க முயற்சி பண்றான். தப்புகள் செய்தாலும் அந்த முனைப்பு இந்த பள்ளிகள் மூலமாக வந்திருக்கு'' என்றார். பள்ளிகளில் மற்ற பையன்கள் எதுவும் தொந்தரவு பண்ணுகிறார்களா என விசாரித்தேன்.
''நீங்க வேற அவனுக்கு அவங்கதான் பாதுகாப்பு, ஏன்னா ஸ்கூல்ல பசங்களுக்கு நம்ம பையனோட பிரச்சனைகளை முன்னாடியே எடுத்து சொல்லி தயார் செஞ்சுடறாங்க அதனால மத்த பசங்க இவனை புரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்தபடி நடந்துக்குறாங்க, காலைல ஸ்கூல்லதான் சாப்பாடு, அவனுக்கு அதுகதான் ஊட்டிவிடும்ங்க' என்றார்.
''இவன் டெவலப் ஆகுறத பாக்க அவ்ளோ சந்தோஷமா இருக்குண்ணே, இவன் ஒன்னும் பெரிய படிப்பு படிச்சு சாதனை பண்ணனும்னு இல்ல, அவன் சாப்பாட்டை அவனே சாப்பிடறான் அதுவே சாதனைதாண்ணே... அதுக்கு மேல அவன் இத்தனை வருஷத்துல இப்பதான் சந்தோஷமாருக்கான்'' என்றார். சொல்லும்போதே அவ்வளவு கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
இந்த திட்டத்தில் இன்னொரு அம்சம், பள்ளிக்கு வரமுடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருக்கும் குழந்தைகளின் வீட்டுக்கே கல்வியை கொண்டு சேர்க்கிறார்கள். தமிழ்நாடு முழுக்க 1.4லட்சம் குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பலன் பெறுகிறார்கள், இக்குழந்தைகளை தேடித்தேடி அரசே கண்டுபிடித்து கல்வி வழங்குகிறது. மருத்துவமுகாம்களில் இக்குழந்தைகளுக்கு இருக்கிற பிரச்சனைகளை கண்டறியப்பட்டு, சுகாதாரத்துறை கூட்டணியோடு உபகரணங்கள், அறுவைசிகிச்சை மாதிரியான உதவிகளை அரசே செய்கிறது! போக்குவரத்து வசதிகள் இல்லாதவர்களுக்கும் அதற்கான உதவிகளையும் அரசு முன்வந்து செய்துகொடுக்கிறது! இதெல்லாம் கேட்கும்போதே ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருந்தது!
இப்படி ஒரு திட்டம் இருப்பதும் இப்படியெல்லாம் விஷயங்கள் நடந்துகொண்டிருப்பதும் பலருக்கும் தெரிந்திருக்காது. பல குழந்தைகளை அதனாலேயே பள்ளிகளுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பூட்டி முடக்கி வைத்திருக்கிறார்கள் பல பெற்றோர்கள், உங்களுக்கு அப்படிப்பட்ட குழந்தைகளைத் தெரிந்தால் எந்த வயதாக இருந்தாலும் தயங்காமல் அரசுப்பள்ளிகளுக்கு அனுப்ப பரிந்துரை செய்யுங்கள். இந்த INCLUSIVE EDUCATION திட்டம் பற்றி சொல்லுங்கள். ஒரு பைசா செலவில்லாமல் அரசு அவர்களை பார்த்துக்கொள்ளத் தயாராயிருக்கிறது!, என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications