குடும்ப தலைவிகளுக்கு ஜாக்பாட்.. அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை! அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
திண்டுக்கல்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தகுதியான நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
அரசு சேவைகளை மக்களின் இருப்பிடத்துக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை கடந்த 15ஆம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ஐ.பெரியசாமி," தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அந்தவகையில், முதலமைச்சர் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார். கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் யாரையும் தேடிச் சென்று அலைய வேண்டியது இல்லை. உங்கள் கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் மனுக்கள் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டுமின்றி சொல்லாத பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் 5 பவுன் வரை தள்ளுபடி செய்யப்பட்டன. மகளிர் சுயஉதவிக்குழு கடன் சுமார் 2,700 கோடி தள்ளுபடி செய்யப்பட்டன. விவசாயிகள் கடன் சுமார் ரூ.12,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டன. பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தகுதியான நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 4 இலட்சம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
அதேபோல், 100 நாள் வேலை திட்டத்தில் ஒன்றிய அரசிடமிருந்து நிதி கிடைக்காதபோதிலும், மாநில அரசின் நிதியிலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி, அவர்கள் பாதுகாப்பாக வசிப்பதற்காக வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன" என்றார்.












Click it and Unblock the Notifications