கர்நாடகா தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி தீவிரம்-நேற்று தேர்தல் அறிக்கை; இன்று 2-வது வேட்பாளர் பட்டியல்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி கட்சி படுதீவிரமாக இறங்கி இருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி நேற்று வெளியிட்ட நிலையில் இன்று 60 வேட்பாளர்களைக் கொண்ட 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கொள்கைகளோடு மிக இணக்கமான கட்சி ஆம் ஆத்மி. வட இந்திய மாநிலங்களில் பாஜக, காங்கிரஸுக்கு சவால்விடும் வகையில் வளர்ந்து வருகிறது ஆம் ஆத்மி. டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி.

வட இந்திய மாநிலங்களைத் தொடர்ந்து தென்னிந்தியாவிலும் களமிறங்கி உள்ளது ஆம் ஆத்மி. கர்நாடகாவை குறிவைத்து படுதீவிரமான தேர்தல் பணிகளை ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்டு வருகிறது. கர்நாடகாவில் 224 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இதில் முதல் கட்டமாக 80 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியானது தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் 61 வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. ஒரு வீட்டுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம், ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றிருந்தன.

தற்போது 60 வேட்பாளர்களைக் கொண்ட 2-வது வேட்பாளர் பட்டியலையும் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இன்று இந்த 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.












Click it and Unblock the Notifications