காங்கிரஸ் கட்டினால்..காமராஜர் கட்டினார்! கலைஞர், ஜெயலலிதா செய்தால் தமிழக அரசா? கரு.பழனியப்பன் கேள்வி
திண்டுக்கல்: காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்கும், அதற்கு பிறகு தமிழக அரசு சார்பில் செய்தது என சொல்வது தான் அரசியல் எனவும், எல்லாவற்றையும் தமிழக அரசு என்று சொல்ல வேண்டும், இல்லை என்றால் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என சொல்ல வேண்டுமென இயக்குநர் கரு.பழனியப்பன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திரப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், நத்தம் வட்டாட்சியர், முதன்மை கல்வி அதிகாரி, மற்றும் ஆசிரியர் பெருமக்கள், ஊர் கிராமத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பேசுகையில், "பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறோம். 3000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவள் தமிழ் தாய். எப்படி சீரிளமை ஆக இருக்க முடியும்.

முதிய தோற்றத்தில் அல்லவா இருக்க வேண்டும். தமிழ் பழைய மொழி கீழடியை தோண்டினால் 4000 ஆண்டுகள் என சொல்லுகின்றனர். திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! எப்படி இளமையாக தமிழ்த்தாய் இருக்க முடியும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய திருக்குறளை இங்குள்ள பள்ளி மாணவி சொல்கிறார் என்றால் அதுதான் தமிழ்த்தாயின் உன் சீரிளமைத் திறம்வியந்துசெயல்மறந்து. 2000 ஆண்டுகளாக இளமையாகவே இருக்கிறார் தமிழ் தாய்.
நூறாண்டு கடந்தும் இன்று பள்ளியில் சேர்ந்த மாணவி இது என் பள்ளிக்கூடம் என்று சொல்லும் பொழுது இளமையாக இருக்கிறது. கல்வி அதிகாரிகள் மாதம் ஒருமுறை நேரடியாக அரசு பள்ளிக்கு போங்க. அதிகாரிகள் கலந்து கொண்டால் மற்றும் விழா நடந்தால் அங்கு பில்டிங் பெயிண்ட் அடிப்பாங்க, கக்குஷ் கழுவார்கள். இதற்கு வாய்ப்பு எல்லாம் அதிகாரிகள் நேரடியாக சென்றால் நடக்கும். நேரடியாக போக வைப்பது ரொம்ப முக்கியம். அதிகாரிகள் நேரடியாக பள்ளியில் போகும்போது அங்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் தெரிய வருகிறது. அதை சரி செய்ய முடியும்.
1963இல் காமராஜர் ஆட்சி காலத்தில் ஓட்டு கட்டிடம் இந்த அரசு பள்ளிக்கு திறந்து வைக்கப்பட்டு உள்ளது. 1980 ஆண்டு நடுநிலைப் பள்ளியாக "தமிழக அரசால்" தரம் உயர்த்தபட்டது. 2010 ஆம் ஆண்டு நவீன வசதிகளுடன் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்ததப்பட்டு உள்ளது "தமிழக அரசால்". ஆனால் ஓட்டு கட்டிடம் காமராஜர் ஆட்சி காலத்தில் வந்தது. மற்றவை தமிழக அரசு என இருக்கிறது . அவ்வளவு தான் அரசியல். ஒன்று எல்லாவற்றையும் தமிழக அரசு என்று சொல்ல வேண்டும் இல்லை என்றால் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் ஆட்சி காலங்கள் என்று சொல்லுங்கள்.
அதை விளங்கி விட்டால் நமக்கு வளர்ச்சி விளங்கிவிடும். எப்ப தேவையோ அப்போ பெயர் குறிப்பிடுவதும் எப்ப தேவை இல்லையோ அப்போது தமிழ்நாடு அரசு ஆக்கி விடுவது தான் பெரிய அரசியல். இது எதுவும் அவசியம் இல்லை, நாம் பிள்ளைகள் பிரமாதமாக படிக்க வேண்டியது. நன்கு படிக்க வைத்து பணம் சம்பாதிக்க வைத்து அந்த பிள்ளை இந்த பள்ளிக்கூடத்திற்கு வந்து கட்டிடம் கட்டுவது என்றால் அதைவிட மிகச் சிறந்த சந்தோஷம் வேறொன்றும் கிடையாது. அதற்கான துவக்கமாக இந்த நூற்றாண்டு விழா இருக்க வேண்டும்."என பேசினார்.












Click it and Unblock the Notifications