போன வரம் தான் வளைகாப்பு.. பிள்ளை முகத்தை கூட பார்க்காமல் பறிபோன உயிர்! விஜய் பிரச்சாரத்தில் விபரீதம்
திண்டுக்கல்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரன விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழுந்த 39 பேரில் திண்டுக்கல்லை சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பவரும் ஒருவர். அவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த வாரம் மனைவிக்கு வளைகாப்பு நடத்திய தகவல் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (வயது 26). இவர் கரூரில் தங்கி இன்டீரியர் டெக்கரேஷன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தாமரைக்கண்ணனுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது.
அவரது மனைவி தீபா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த மாதம் தீபாவிற்கு வளைகாப்பு முடிந்து, சேவைக்காரன் பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் தாமரைக்கண்ணன் நேற்று கரூரில் நடைபெற்ற விஜயின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தாமரைக்கண்ணன் பரிதாபமாக பலியானார். இறந்த தாமரைக்கண்ணனின் உடல் இன்று ஒத்தப்பட்டியில் உள்ள மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவரின் உடலுக்கு உறவினர்களும் ஊர் மக்களும் கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினர். ஊரிலிருந்து வந்த நிறைமாத கர்ப்பிணியான தீபா தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுது மயங்கி விழுந்தார். இந்த காட்சி காண்பவரை கண்கலங்க வைத்தது. விஜய் பிரச்சாரத்திற்கு சென்று கூட்ட நெரிசலில் சிக்கி கூலித் தொழிலாளி பலி சம்பவத்தால் ஒத்தப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
அதேப்போல், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே வடக்கு தளிப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (வயது 35). இவருக்கு மல்லிகா (வயது 30) என்ற மனைவியும், பூதிகா(13) என்ற மகளும், பூமிநாதன் (வயது 11) என்ற மகனும் உள்ளனர். சங்கர் கணேஷ் கரூரில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். தினமும் வீட்டிலிருந்து பேருந்து மூலம் கரூர் வேலைக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று கரூரில் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். ஊருக்கு கொண்டு வரப்பட்ட அவரின் உடலுக்கு உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். வேலைக்குச் சென்ற தொழிலாளி வீட்டிற்கு பிணமாக வந்ததால் வடக்கு தளிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அதை தொடர்ந்து இறந்த இருவரின் உடலும் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
நேற்று கரூரில் விஜயின் உரையை கேட்க பெரும் கூட்டம் திரண்ட நிலையில் ட்திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலர் மயங்கி கீழே விழுந்தனர். சம்பவ இடத்திலிருந்தே பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதில் பெரும்பாலோனோர் வழியிலேயே உயிரிழந்தனர். தற்போது கிடைத்த தகவலின் படி, 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர்.












Click it and Unblock the Notifications