திமுக பாணியில் திண்டுக்கல் தொகுதியை கை கழுவியதே.. எஸ்டிபிஐக்கு ஒதுக்கியது அண்ணா திமுக!
திண்டுக்கல்: லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல அதிமுகவும் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ (SDPI) கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. திமுக, அதிமுக இரு கட்சிகளுமே திண்டுக்கல் தொகுதியில் களமிறங்காதது அக்கட்சிகளின் தொண்டர்களுக்கு சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் திண்டுக்கல் மாவட்டம் இருந்து வந்தது. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் திண்டுக்கல் லோக்சபா தொகுதியில்தான் எம்ஜிஆரின் அதிமுக முதன் முதலாக தேர்தல் வெற்றியை பெற்றது.

திண்டுக்கல் தொகுதியைப் பொறுத்தவரை 1952 முதல் 1962 வரை காங்கிரஸ் வசம் இருந்தது. பின்னர் திமுக வாகை சூடியது. 1973 திண்டுக்கல் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் அப்போதுதான் தொடங்கப்பட்ட அதிமுகவின் மாயத்தேவர் இரட்டை இலை சின்னத்தில் அமோக வெற்றியைப் பெற்றார். அதிமுகவுக்கும் அதன் நிறுவனர் எம்ஜிஆருக்கும் ஆகப் பெரும் நம்பிக்கையை விதைத்தது திண்டுக்கல் லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் வெற்றி. அதே மாயத்தேவர் 1980 தேர்தலில் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984, 1989, 1991-ல் அதிமுக வென்ற தொகுதி. அதிமுகவின் இன்றைய பொருளாளர் சீனிவாசனுக்கு 'திண்டுக்கல்' சீனிவாசன் என்ற அடைமொழியை கொடுத்த தொகுதி இது. 1996 முதல் 2014 தேர்தல் வரை தமாகா, அதிமுக, காங்கிரஸ் மாறி மாறி வெற்றி பெற்ற நிலையில் 2019 லோக்சபா தேர்தலில் திமுகவின் வேலுச்சாமி இத்தொகுதியில் அறிமுகமே இல்லாமல் அசத்தல் வெற்றியைப் பெற்றிருந்தார்.
பொதுவாக திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் திமுக, அதிமுக கட்சிகள் முதலில் போட்டியிட விரும்பும்; பின்னர் கூட்டணி கட்சிகளை சமாளிக்க ஒதுக்கி விடுவது வழக்கம்.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சிபிஎம் கட்சியின் பாண்டி, போட்டியிட்டு வெறும் 1.81% வாக்குகளைத்தான் பெற்றார். அதாவது அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸுக்கு அடுத்து 5-வது இடம்தான் சிபிஎம் கட்சிக்கு கிடைத்தது. 2019 லோக்சபா தேர்தலில் பாமக 2-வது இடத்தைப் பெற்றது. இத்தேர்தலில் பாமகவுக்கு 17.96% வாக்குகள் கிடைத்தன.
தற்போதைய தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு (சிபிஎம்) திண்டுக்கல் லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிபிஎம் வேட்பாளராக சச்சிதானந்தன் அறிவிக்கப்பட்டார். இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் கண்ணன் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது. அதேநேரத்தில் பாமக இணைந்தால் அக்கட்சிக்குதான் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. தற்போது பாமகவோ பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது.
இதனையடுத்து அதிமுக முதல் கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. மேலும் திண்டுக்கல் லோக்சபா தொகுதியை கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ-க்கு ஒதுக்குவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே திண்டுக்கல்லில் போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்த்துவிட்டது இரு கட்சி தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பது கள யதார்த்தம்.












Click it and Unblock the Notifications