50 வருஷமா அரசியல்ல இருகேன்! ’அவரு’ திருப்தி அடையனும்னு அவசியமில்லை.. பிடிஆருக்கு பதிலடி கொடுத்த ஐபி!
திண்டுக்கல் : கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறிய நிலையில், நான் 50 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன் மக்களும் முதல்வரும் திருப்தி அடைந்தால் போதும் ரேஷன் கடையை பற்றி தெரியாதவர்கள் திருப்தி அடைய வேண்டிய அவசியம் இல்லை என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆவேசமாக பேசியுள்ளார்.
மதுரை மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சு தான் திமுகவுக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர்களான ஐ.பெரியசாமி, சக்கரபாணியை அவர் விமர்சித்துள்ளதாக தென் மாவட்ட உடன்பிறப்புகள் பொங்கி வருகின்றனர்.
இணைந்த கைகள்! புரட்சி தலைவர்னா அது தலைவர் ஸ்டாலின் தான்! ஒரே போடாக போட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
அப்படி என்னதான் பேசினார் பிடி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவு துறையின் செயல்பாடு கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாக சிறப்பாக தான் உள்ளது ஆனால் கூட்டுறவுத்துறையில் தினமும் ரயில்கள் நடத்தப்படுவது ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பது என பல்வேறு செய்திகள் வருகிறது கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகள் தனக்கு திருப்திகரமாக இல்லை என கூறினார். இந்நிலையில் மக்களும் முதல்வரும் திருப்தி அடைந்தால் போதும் ரேஷன் கடையை பற்றி தெரியாதவர்கள் திருப்தி அடைய வேண்டிய அவசியம் இல்லை என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆவேசமாக பேசியுள்ளார்.
ஐ பெரியசாமி
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சக்கரபாணியுடன் பேசிய அவர்," வெளிப்படை தன்மை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். குறைகள் வரவேற்கப்படுகிறது. குறைகள் எங்கே நடக்கிறது என்று சொன்னால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவரைக் கேளுங்கள் என்ன நடந்தது எங்கே தவறு நடந்தது என்று. அவர் திருப்தி அடையவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது மக்கள் திருப்தி அடைய வேண்டும். எனக்கும் அமைச்சர் சக்கரபாணிக்கும் 7 கோடி மக்கள் திருப்தி அடைய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் திருப்தி அடைய வேண்டும். வேறு யாரையும் திருப்தி படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை.
50 ஆண்டு அரசியல்
நான் 50 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கிறேன். அமைச்சர் சக்கரபாணி 35 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறார் ஆறுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மக்களின் திருப்தி தான் எங்களுக்கு திருப்தி. எந்த திட்டமாக இருந்தாலும் மக்களின் கைகளில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதுதான் எங்களது வேலை. நாங்கள் இருவரும் வேலைக்காரர்கள். மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் அவர்கள் திருப்தி அடைய வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
கவலை இல்லை
இது மக்களுக்கான துறை உணவுப்பொருள் வழங்கள் துறையும் அதற்காகவே உள்ளது. எங்காவது குறை இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் மாலை போட்டு உங்களுக்கு மரியாதை செய்வோம். குறையை நீங்கள் சொன்னால் நாங்கள் சந்தோஷப்படுவோம். மக்கள் தான் திருப்தி அடைய வேண்டும் ரேஷன் கடையை பற்றி தெரியாதவர்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் நிதியே கேட்கவில்லை.
முதல்வர் திருப்தி
அவரையே கேளுங்கள். மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள் முதல்வர் திருப்தியாக இருக்கிறார். அதற்காகத்தான் எங்களை அமைச்சர் ஆக்கி இருக்கிறார். பெருமைக்காக அல்ல. சுய லாபத்திற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. பொதுநல நோக்கோடு அரசியலுக்கு வந்தவர்கள் பத்தாயிரம் பேருக்கு பணம் வாங்காமல் வேலை கொடுத்திருக்கிறோம் வேற எந்த மாவட்டத்திலாவது அதுபோல செய்திருக்கிறார்களா? என ஆவேசமாகப் பேசினார். அவரது இந்த பேச்சை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அங்கிருந்த திமுகவினர் அமோதிப்பது போல் கைதட்டி ஆராவரம் செய்தனர்.