அடுத்த ஆக்சனுக்கு தயாராகும் திமுக! உள்ளாட்சி தேர்தல் எப்போது? அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன தகவல்!
திண்டுக்கல்: ஊராட்சிகளில் வரும் நவம்பர் 5ஆம் தேதி தலைவர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. பதவிக் காலம் முடிவடைந்த பின்பு பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டு ஆய்வு நடத்தி பெரிய ஊராட்சிகளை பிரிப்பதற்கும், மேலும் மாநகராட்சி நகராட்சிகளின் அருகே உள்ள ஊராட்சிகளை இணைக்கும் பணிக்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டும் பயனாளிகளுக்கு கட்டுமான பணி ஆணை மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பின்னர் கலைஞரின் கனவு இல்லம் கட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பணி ஆணையினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, கலைஞரின் கனவு இல்லம் திட்டமானது வீடு இல்லாதவர்களுக்கும், குடிசையில் வாழும் குடும்பத்தினருக்கும், தமிழக முதல்வர் அவர்களால் துவக்கப்பட்டது.
தற்போது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு இன்று 1256 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல வீடு திட்டம் கட்ட ஆணை வழங்கி உள்ளோம், அதேபோல் ஆத்தூர் தொகுதி முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் "கலைஞரின் கனவு இல்லம்" திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 1023 குடிசைகள், புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பில் 1126 குடிசைகள், அனைவருக்கும் வீடு திட்டத்தில் 1946 குடிசைகள் என மொத்தம் 4095 குடிசைகள் கண்டறியப்பட்டு, அந்த குடிசைகள் "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது." என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"ஊராட்சிகள் பல மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட வேண்டியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக குறிப்பாக கடந்த ஆட்சி காலத்தில் இருந்து இதற்கான மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டு காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆட்சியாக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி உள்ளது.
ஒன்றியங்களை பிரிப்பது. ஊராட்சி அமைப்புகள் சிலவற்றில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. அதனை மாநகராட்சியுடன் சேர்ப்பது. இது தொடர்பாக கிராம மக்களிடம் கருத்து கேட்பது போன்றவைகள் முடிந்தவுடன் தேர்தல் உடனடியாக வைக்கப்படும். இந்தப் பணி தற்போது விரைவாக தொடங்கப்பட உள்ளது.
ஊராட்சிகளில் பதவி காலம் இருக்கும்போது இந்தப் பணிகளை செய்ய முடியாது. தற்போது திண்டுக்கல் மாநகராட்சியில் எந்தெந்த பஞ்சாயத்து சேர உள்ளது என்ற கருத்தினை கேட்க வேண்டும். ஏற்கெனவே 7 முதல் 8 ஊராட்சிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், சில ஊராட்சிகள் கொடுக்கவில்லை. அவை அனைத்தையும் சேர்த்து அதற்கான கமிட்டி மூலம் பரிசீலனை செய்து அந்த கமிட்டி முடிவு செய்யும். மாநகராட்சியுடன் அருகிலுள்ள ஊராட்சிகளை இணைப்பது தொடர்பாக கிராம மக்களிடம் கருத்து கேட்பது போன்றவை முடிய வேண்டும்.
ஊராட்சிகளில் வரும் நவம்பர் 5ஆம் தேதி தலைவர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. முடிவடைந்த பின்பு பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டு ஆய்வு நடத்தி பெரிய ஊராட்சிகளை பிரிப்பதற்கும் மேலும் மாநகராட்சி நகராட்சிகளில் அருகே உள்ள ஊராட்சிகளை இணைக்கும் பணியும் உள்ளது. இதனால் தற்போதைக்கு ஊராட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications