மோடி ஏன், எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டவில்லை.. திண்டுக்கல் சீனிவாசன் கிடுக்கிப்பிடி கேள்வி
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை பாராட்டிய பிரதமர் மோடி நான்கரை ஆண்டு காலம் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை பாராட்டத் தவறியது ஏன் என அக்கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பேசும் போது, அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரையும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் வெகுவாகப் பாராட்டினார்.

தமிழக வருகையின்போது, மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நினைவுக்கு வந்தார்.மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரத்தை கொடுத்த அவரை இளைஞர்கள், பெண்கள் மிகப்பெரிய அளவில் மதித்தனர். இப்போதும் எம்ஜிஆரை ஒப்பற்ற தலைவர் என போற்றி புகழ்கின்றனர். அவர் குடும்ப அரசியல் காரணமாக ஆட்சிக்கு வந்தவர் அல்ல.
துரதிர்ஷ்டவசமாக, அவரை கேவலப்படுத்துவதுபோல தமிழகத்தில் திமுகவினர் ஆட்சி நடத்தி வருகின்றனர்.எம்ஜிஆர் போலவே ஆட்சியை தந்தவர் ஜெயலலிதா. அவர் தன் வாழ்நாள் முழுவதையும் பொதுநலனுக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் கொடுத்தார். அவருடன் நெருங்கி பணியாற்றி உள்ளேன். அவருக்கு மீண்டும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று கூறினார் பிரதமர் மோடி.
மோடியின் பேச்சுக்கு பல அரசியல் கட்சித்தலைவர்களும் கருத்து கூறிவருகின்றனர். அதே நேரத்தில் அதிமுகவின் முதல் கட்ட தலைவர்கள் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மோடியின் கருத்துக்கு பதில் கூறியுள்ளார் திண்டுக்கல் சீனிவாசன்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், பழநியை அடுத்துள்ள வயலூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், தமிழகத்தில் நிலவுகிற காவிரி பிரச்சினை, மீனவர் பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசுகள் மவுனம் காக்கின்றன.
இதுபற்றி எந்த அரசுகளும் கவலைப்படுவதில்லை. இதை உணர்ந்து தான் மதவாத, மத வெறி பிடித்த கட்சியான பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது என்றார். நேற்றைய தினம் திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீனிவாசன், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி பாராட்டியிருக்கிறார்கள்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நான்கரை ஆண்டு காலம் ஆட்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை பாராட்டியிருந்தால் சரியான அளவு கோலாக இருக்கும். இல்லை என்றால் அவரது ஆட்சி சரியில்லை என்று சொல்லியிருக்க வேண்டும். அதையும் சொல்லவில்லை.
கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டது. அதனை மோடி பாராட்டியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் நம்மிடையே உள்ளது. மக்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது. நோய்களில் இருந்து மக்களை எப்படி காத்தார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அதனை மேடையில் சொல்லி பாராட்டியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தால் நடுநிலையாக இருந்திருக்கும். ஆனால் திருப்பூர் கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டிய மோடி, எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications