எடப்பாடி அணி அதிமுக மாஜி அமைச்சரின் மாமனார் மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல்..!
திண்டுக்கல் : அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதனின் மாமனார் நல்லையா காலமான நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் முதல் அதிமுகவில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பினரும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். இரு தரப்பினரும், மாறி மாறி கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
இரு தரப்பும் இனி இணையவே வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறி வருகின்றனர். அதேசமயம், ஓபிஎஸ், இரு அணிகளும் இணைந்து செயல்படுவதற்கான மூவ்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த நத்தம் விசுவநாதன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

நத்தம் விசுவநாதன்
அதிமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ, தற்போது எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கிறார். தர்மயுத்தம் காலத்தில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த விஸ்வநாதன், தற்போது எடப்பாடி பழனிசாமி அணியின் முக்கிய புள்ளிகளில் ஒருவராக இருக்கிறார். நத்தம் விசுவநாதனின் மைத்துனர் ஆர்.வி.என்.கண்ணன், ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார். நத்தம் ஒன்றிய சேர்மனாகவும் இருந்து வருகிறார் ஆர்.வி.என்.கண்ணன்.

முன்னாள் அமைச்சரின் மாமனார் மறைவு
ஆர்.வி.என் கண்ணனின் தந்தையும், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மாமனாருமான எஸ்.நல்லையா காலமானார். அவரது மறைவு திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நத்தம் விசுவநாதனின் மாமனார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல, ஓ.பன்னீர்செல்வமும் இரங்கல் தெரிவித்துள்ளார். எதிர் முகாமைச் சேர்ந்த ஓபிஎஸ், நத்தம் விசுவநாதனின் மாமனார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

ஓபிஎஸ் இரங்கல்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் நத்தம் இரா.விசுவநாதன் அவர்களின் மாமனார் எஸ்.நல்லையா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். எஸ்.நல்லையா அவர்களை இழந்து வாடும் நத்தம் விசுவநாதன் அவர்களுக்கும், தந்தையை இழந்து வாடும் ஆர்.வி.என்.கண்ணன் அவர்களுக்கும், அன்னாரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொண்டு, அன்னாரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்
நத்தம் விஸ்வநாதனின் மாமனார் மறைவுக்கு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என். கண்ணன், உலுப்பகுடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல் ஆகியோரின் தந்தையும், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மாமனாருமான எஸ்.நல்லையா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை கேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது ஆன்மா இறைவனடி சேர பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications