400 ஏக்கர் நிலங்களுக்கு பட்டா! 40 ஆண்டுகால கோரிக்கை! ஐ.பி.செந்தில்குமாரை கொண்டாடும் ஊர்மக்கள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் 40 ஆண்டுகால கோரிக்கைக்கு இப்போது தீர்வு கிடைத்திருப்பதால் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்து ஒரு ஊரே சேர்ந்து அவரை கொண்டாடுகிறது.
400 ஏக்கர் உபரி நிலங்களுக்கு ஒரே நேரத்தில் பட்டா பெற்றுக் கொடுத்திருப்பதன் மூலம் 200 விவசாயிகள் பயன் அடைந்திருக்கின்றனர்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

பழனி தொகுதி
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெரியம்மாபட்டி, சின்னகாந்திபுரம், புளியம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஜமீன்தாரர்கள் வசமிருந்து 3,000 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன. அதில் 400 ஏக்கர் நிலத்தில் இரண்டு தலைமுறைகளாக 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். அங்கு விளையும் காய்கறிகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட் மூலம் விற்பனையும் செய்து வருகிறார்கள்.

40 ஆண்டுகாலம்
இந்நிலையில் விவசாயம் செய்து என்ன பயன், நிலத்திற்கு பட்டா இல்லாததால் கூட்டுறவு சங்க கடன், பயிர் காப்பீடு, அரசின் நலத்திட்டங்கள் என எதிலும் அந்த விவசாயிகளால் பலன் பெற முடியாத நிலை இருந்தது. பெரியம்மாபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் 40 ஆண்டுகளாக இது குறித்து மனு மேல் மனு கொடுத்து அசந்துவிட்டனர். காரியம் நடந்தபாடில்லை. இந்நிலையில் 40 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்து விவசாயிகள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் பழனி எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமார்.

தொகுதிப்பணி
ஐ.பி.செந்தில்குமாரும் இந்தப் பிரச்சனையை தீர்க்க ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். வழக்கம் போல் சாக்கு போக்குகளை வருவாய்த்துறை அதிகாரிகள் கூறிய நிலையில் விடாபிடியாக நின்று இந்தக் காரியத்தை விவசாயிகளுக்கு முடித்துக் கொடுத்திருக்கிறார். இதனிடையே தொகுதிப் பணிகளுக்கு மத்தியில் கட்சிப் பணிகளையும் அவர் கவனிக்கத் தவறுவதில்லை. காதுகுத்து தொடங்கி பிறப்பு, இறப்பு என கட்சிக்காரர்கள் வீட்டில் ஒரு நிகழ்வு என்றால் அங்கு தவறாமல் ஆஜராகிவிடுகிறார் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ.

மாவட்டச் செயலாளர்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் ஐ.பி.செந்தில்குமார், கட்சி விவகாரங்களில் தனது தந்தையும் மூத்த அமைச்சருமான ஐ.பெரியசாமியின் ஆலோசனைப் படியே சில முக்கிய முடிவுகளை எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications